FeaturesLead NewsLocal

ஆட்சி மாற்றத்தை இலக்காக வைத்தே முஸ்லிம்கள்மீது குண்டர்கள் தாக்குதல்! – ரணில் தலைமையிலான கூட்டத்தில் சுட்டிக்காட்டு

“உயிர்த்த ஞாயிறு தீவிரவாதத் தாக்குதலைக் காரணம் காட்டி, குருணாகல், புத்தளம் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட இனவாதத் தாக்குதல்களின் பின்னணியில் அரசியல் பின்புலம் இருக்கின்றது. ஆட்சி மாற்றமொன்றை இலக்காக வைத்தே இப்படியான தாக்குதல்கள் குண்டர்களால் நடத்தப்படுகின்றன.”

– இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

முஸ்லிம்களுக்கு எதிராக இரண்டு நாட்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இனவாதத் தாக்குதல்களில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட குருணாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டி நகருக்குப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அமைச்சர்களான கபீர் ஹாசிம், அகிலவிராஜ் காரியவசம், ரவி கருணாநாயக்க, இராஜாங்க அமைச்சர்களான பைசால் காசீம், அலி சாஹிர் மௌலானா மற்றும் ஜெ.சி.அலவத்துவல ஆகியோர் நேற்றுமுன்தினம் சென்றனர்.

கொட்டம்பாபிடிய பிரதேசத்துக்கு் சென்ற பிரதமர், அங்கு தாக்குதலுக்கு இலக்கான மஸ்ஜிதுல் ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல்களுக்குச் சென்று அழிவுகளை நேரில் பார்வையிட்டார். அதன் பின்னர் குளியாப்பிட்டி உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் சிறப்புக் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கன், பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகள், மதகுருமார்கள், முக்கியஸ்தர்கள் எனக் குறிப்பிட்ட சிலரே அந்தக் கலந்துரையாடலில் பங்குகொண்டனர்.

இந்தக் கலந்துரையாடலின்போது அமைச்சர் ரவூப் ஹக்கீம் உட்பட ஏனையவர்கள் முன்வைத்த கருத்துகளை செவிமடுத்த பிரதமர், பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மீண்டும் கலவரங்கள் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுவதன் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்று அங்கு சமூகமளித்திருந்த பாதுகாப்புத்துறை மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பாதுகாப்புத் தரப்பினர் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தவறியமை தொடர்பில் முதலில் கவனம் செலுத்தப்பட்டது. போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பிரயோகிப்பதில் ஏற்பட்ட பலவீனமே வன்செயல் நடவடிக்கைகள் உக்கிரமடைவதற்குக் காரணமாக அமைந்தது என முஸ்லிம் அமைச்சர்கள் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின்னரும்கூட, தாக்குதல் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டமை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று பிரதமர் தெரிவித்தார். அவ்வாறான வன்செயல்கள் உடனடியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தால் இந்தளவு நிலைமை மோசமடைந்திருக்காது என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டார். பாதிப்படைந்தவர்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்கப்படும் என்றும் தலைமை அமைச்சர் அங்கு உறுதியளித்தார்.

கடந்த வருடம் கண்டியிலும் மற்றும் அம்பாறையிலும் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களின்போது இழப்பீடுகள் வழங்கிய அதே சுற்றறிக்கையின் பிரகாரமே, இதில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதன்போது சுட்டிக்காட்டினார்.

“இந்தத் துரதிஷ்டமான நிலைமை உரிய முறையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும். அதில் தவறிழைக்கப்பட்டுள்ளதை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன். மக்கள் அச்சமின்றி வாழவேண்டிய சூழ்நிலை உடனடியாக உருவாக்கப்பட வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளைப் பொலிஸாரும், பாதுகாப்புப் படையினரும் துரிதப்படுத்த வேண்டும்” எனவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதன்போது தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல் நடவடிக்கைளை மேற்கொண்ட தருணத்தில் வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்களும் பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்து உள்ளூர்வாசிகளுடன் சேர்ந்து, முஸ்லிம் பிரதேசங்களுக்குள் நுழைந்து தாக்குதல்கள் நடத்தினர் என்று பிரதமரினதும், அமைச்சர்களினதும் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இந்த விடயத்தை அங்கு சமூகமளித்திருந்த பௌத்த மதகுருமார்களும் உறுதிப்படுத்தினார்கள்.

இந்த சம்பாவிதத்தின் பின்னணியில் ஹெட்டிபொல பொலிஸ் நிலையத்தால் கைதுசெய்யப்பட்ட 6 பேரை குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வந்து விடுவித்துச் சென்றார் எனவும் பிரதமரிடமும், அமைச்சர்களிடமும் தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை, இந்தத் தாக்குதல்களின் பின்னால் ராஜபக்ச அணியினர் இருக்கின்றனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது. உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களைக் காரணமாக வைத்து, ஆட்சி மாற்றமொன்றை நோக்கமாகக் கொண்டு ராஜபக்ச அணியைச் சேர்ந்த குண்டர்கள் இவ்வாறான தாக்குதல்களைத் தொடுத்திருந்தனர் எனக் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

இந்தத் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வாகனங்களில் வந்தவர்களின் பதிவுகள் மற்றும் வாகன இலக்கத் தகடுகளைப் பாதுகாப்புக் கமராக்கள் மற்றும் தனிப்பட்ட காணொளிகள் மூலம் இனங்கண்டு அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கும், சூத்திரதாரிகளுக்கும் எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் அங்கிருந்த உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்தக் கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுவினர் பாதிக்கப்பட்ட ஹெட்டிபொல, கொட்டம்பாபிடிய, பண்டாரகொஸ்வத்த, மடிகே, அனுக்கன, எஹட்டுமுல்ல, தோரகொடுவ, கினியம, பூவல்ல, அசனாகொடுவ, கல்ஹினியாகடுவ போன்ற இடங்களில் தாக்குதலுக்குள்ளான இடங்களுக்குச் சென்று, மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்துகொண்டனர்.

ஆயுதங்களோடு வெளியூர் மக்களும் உள்ளூர் மக்களும் ஒன்றாகச் சேர்ந்து தங்களைத் தாக்கியபோது தாங்கள் அனுபவித்த மன வேதனைகளைப் பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீர்மல்க எடுத்துரைத்தனர். புனித ரமழான் மாதத்தில் முஸ்லிம்கள் நோக்குகின்ற நோன்பை ஒழுங்காக நோற்க முடியாமல் செய்ய இத்தகைய விசமிகளின் செயற்பாடுளினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த அவலநிலை தொடர்பில் கவலை தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதல் காணொளிகள் பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல் ஒன்றின் சி.சி.ரி.வி. பதிவகத்தை (ஹார்ட் டிஸ்க்) சீருடைகளில் வந்தவர்கள் கழற்றி எடுத்துக்கொண்டு சென்றனர் என்று சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் அமைச்சரிடம் முறையிட்டனர்.

அவ்வாறான நிலைமைகள் மீள நிகழாது பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன எனவும், இவ்வாறான அசம்பாவிதங்கள் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக தமக்கு அறியத்தருங்கள் என்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading