வாப்பாவின் பெயரைச் சொன்னால் காதுகள், வாயை அவர் வெட்டுவார்! – சஹ்ரானின் மகள் தெரிவிப்பு
“வாப்பாவின் பெயரைக் கூறமாட்டேன். வாப்பாவின் பெயரைச் சொன்னால், என்னுடைய காதுகள் இரண்டையும் வாயையும் வெட்டிவிடுவதாக வாப்பா சொன்னார்.”
– இவ்வாறு உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீமின் நான்கு வயதான மகளான சஹ்ரான் ருசேசினா கூறியுள்ளார் என அம்பாறை பொலிஸ் மற்றும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பெண் பிள்ளையிடம் பாதுகாப்புத் தரப்பினர் சில விடயங்களைக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அம்பாறை, சாய்ந்தமருது வீட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் காயமடைந்த சஹ்ரானின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்புக்கு, கடந்த 8 ஆம் திகதி அழைத்துவரப்பட்டனர்.
அவ்விருவரும் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
தௌஹீத் ஜமா அத் அமைப்பின் பயங்கரவாத நடவடிக்கைள் தொடர்பில் சஹ்ரானின் மனைவியான அப்துல் காதர் பாதிமா சாதியா என்பவர், மிக முக்கியமான தகவல்கள் பலவற்றை விசாரணைப் பிரிவினரிடம் தெரிவித்துள்ளார்.
சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் காயமடைந்த இவ்விருவரும் சஹ்ரானின் மனைவி மற்றும் மகள் என சஹ்ரானின் சகோதரியும் சகோதருமே பாதுகாப்புத் தரப்பினரின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளனர்.
தடுத்துவைக்கப்பட்டுள்ள சஹ்ரானின் மனைவி மற்றும் மகளிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவினர் ஒவ்வொரு நாளும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.