குடியுரிமையை துறப்பதில் கோட்டாவுக்கு சிக்கல் வராது!

அமெரிக்க குடியுரிமையை துறப்பதற்கு கோட்டாபய ராஜபக்சவுக்கு எவ்வித சட்ட சிக்கலும் ஏற்படாது என கூட்டு எதிரணி இன்று (09) அறிவித்தது.

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

முதலாவது வழக்கு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அசிம்சா விக்ரமதுங்கவாலும், இரண்டாவது வழக்கு –  சி்த்திரவதையினால் பாதிக்கப்பட்ட தமிழர் ஒருவரின் சார்பில் அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான திட்டம் என்ற மனித உரிமை அமைப்பாலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இது குறித்து இலங்கை அரசியல் களத்தில் ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்கள் பலகோணங்களில் கருத்துகளை முன்வைத்துவருகின்றனர். கொழும்பில் இன்று ( 9) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ,

” லசந்தவை கொலை செய்தது யார் என்ற தகவலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  நாடாளுமன்றத்தில் வெளியிட்டிருந்தார். ஆனால், அப்போது அவரின் மகள் எதையும் செய்யவில்லை. 10 வருடங்களுக்கு பிறகே லசந்தவின் மகள் கோமா நிலையிலிருந்து எழுந்துள்ளார்போல் தெரிகின்றது.

புலம் பெயர் தமிழ் அமைப்புகளின் உதவியுடன் அமைச்சர் மங்கள சமரவீரவே இதற்கான சதித்திட்டத்தை தீட்டியுள்ளார். ‘கோட்டாபயம்’ என்ற நோய் காரணமாகவே இவ்வாறு செயற்படுகின்றனர்.

எனினும், மேற்படி வழக்குகளால் அமெரிக்க குடியுரிமையை துறப்பதற்கு கோட்டாப ராஜபக்சவுக்கு எவ்வித சிக்கலும் ஏற்படாது என்று அவரது சட்டத்தரணிகள் எமக்கு அறிவித்துள்ளனர்.” என்றார். சட்டத்துறை நிபுணரான பேராசிரியர் ஜி.எல்.பீரிசும் இக்கருத்தை முன்வைத்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *