ஆபிரிக்க வலயத்தை புரட்டிபோட்ட ‘இடாய் ‘ சூறாவளி! 1000 பேர் பலி!!
தெற்கு ஆப்ரிக்காவில் பல மில்லியன் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதற்கு காரணமான இடாய் சூறாவளி மிகப் பெரிய பேரழிவை உருவாக்கியுள்ளதாக ஐ.நா. (ஐக்கிய நாடுகள் சபை) அமைப்பு தெரிவித்துள்ளது.
தெற்கு ஆப்ரிக்காவில் அமைந்துள்ள மொசாம்பிக், ஜிம்பாப்வே மற்றும் மலாவி ஆகிய மூன்று நாடுகளும் பெரும் வெள்ளம் மற்றும் பேரழிவினால் கடந்த சில நாட்களாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இடாய் சூறாவளியின் தாக்கம் குறித்து மொசாம்பிக்கின் அதிபர் பிலிப் நியூஸி “இது ஒரு பெரும் மனித பேரழிவு” என்று குறிப்பிட்டார்.
கடந்த வாரம் மொசாம்பிக்கை தாக்கிய இடாய் சூறாவளியினால் 1000 பேருக்கு மேல் மொசாம்பிக்கில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அந்நாட்டின் அதிபர் கூறியுள்ளார்.
வியாழக்கிழமையன்று மணிக்கு 177 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய இந்த சூறாவளி அந்நாட்டின் சோஃபாலா பிராந்தியத்தில் உள்ள துறைமுக நகரமான பேய்ராவில் கரையை கடந்தது.
இடாய் சூறாவளி ஏற்படுத்திய கடும் பாதிப்பில் நாடெங்கும் சிதறிய மரங்கள், உடைந்த மின்சார தூண்கள் மற்றும் மிதக்கும் நூற்றுக்கணக்கான உடல்கள் என பேரழிவு காட்சிகள் காணப்படுகின்றன.
உயிரிழந்தவர்களை தவிர ஏராளமான மக்கள் வெள்ளம் மற்றும் சூறாவளியினால் காயமடைந்துள்ளனர்.
தென்னாபிரிக்க பிராந்தியம் சந்தித்த மிக மோசமான இயற்கை பேரழிவு இடாய் சூறாவளி என்று ஐநா அமைப்பு இதனை வர்ணிக்கிறது.