காதல் பொறாமையால் நண்பரைக் கொன்ற இளைஞர்- மூவர் கைது

காதலித்த பெண்ணை நண்பரும் காதலித்ததால், அவரை நண்பர்களுடன் சேர்ந்த கொன்ற இளைஞர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் முகமது மும்தசீர் (20). இவர் மயிலாடுதுறையில் உள்ள கல்லூரில் படித்தவர்.

மயிலாடுதுறையில் உள்ள பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மெக்கானிக்கல் பிரிவில் படித்து வந்தார். இவர் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் கல்லூரி படிக்கும் மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

அதேசமயம் இவரது நண்பர் நியாஸ் அகமது என்பவரும் அதே பெண்ணை காதலித்துள்ளார்.

அந்தப் பெண் முகமது மும்தசீருடன் பழகி வந்துள்ளார். அவர்களின் நெருக்கம் அதிகரித்துள்ளது.

இதனால் பொறாமை அடைந்த நியாஸ், மும்தசீர் மீது மனதுக்குள் கடும் ஆத்திரத்துடன் இருந்துள்ளார். ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் மும்தசீருடன் எப்போதும்போல, நண்பனைப் போலவே பேசி வந்துள்ளார்.

இந்நிலையில் தனது நண்பனின் பிறந்த நாளுக்கு செல்லலாம் என மும்தசீருவை திருவிடைமருதூர் அழைத்துச்சென்றுள்ளார் நியாஸ்.

அங்கு சென்றதும் அங்கிருந்த தனது நண்பர்கள் முகமது ஜலீல் மற்றும் சலீம் ஆகியோருடன் சேர்ந்து மும்தசீரை கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர் மூன்று பேரும் மும்தசீரை ஆற்றங்கரைக்கு தூக்கிச்சென்று கொலை செய்துள்ளனர்.

இதையடுத்து கொலை திசை திருப்ப திட்டமிட்ட அந்த மூன்று பேரும், மும்தசீர் செல்போனில் இருந்து அவரது தாய் மும்தாஜுக்கு போன் செய்துள்ளனர்.

அத்துடன் மும்தசீரை கடத்திக்கொண்டு கோவை செல்வதாகவும், ரூ.5 லட்சம் கொடுத்தால் விடுவோம், இல்லையென்றால் கொன்றுவிடுவோம் எனக் கூறியுள்ளனர்.

இதனால் பதட்டம் அடைந்த தாய் மும்தாஜ் பேகம் மற்றும் அவரது உறவினர்கள் திருவிடைமருதூர் காவல் நிலையம் முன்பு குவிந்தனர்.

இதுகுறித்து கொடுத்த புகாரின் பேரில் திருவிடைமருதூர் டிஎஸ்பி ராமச்சந்திரன் விசாரணை மேற்கொண்டார்.

முதற்கட்ட விசாரணையில் இரவு 8.15 மணி அளவில் மும்தசீர் போனிலிருந்து வந்த அழைப்பு திருபுவனம் பகுதியிலிருந்து பேசப்பட்டது என்பதை செல்போன் சிக்னல் மூலம் கண்டறிந்தனர்.

தொடர்ந்து அந்த செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக பதில் வந்தது. இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறையினர், மூன்று பேரையும் டிராக் செய்து கைது செய்தனர்.

அவர்கள் அளித்த வாக்கு மூலத்தையும் பதிவு செய்து கொண்டனர். காதல் பொறாமையில் நண்பரை, சக நண்பரே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *