வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு உதவுங்கள்! – விக்கி வேண்டுகோள்

வடக்கு மாகாணத்தில் பெய்துள்ள தொடர் அடை மழை காரணமாக குறிப்பாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெயர்ந்து தற்காலிக தங்குமிடங்களில் வாழ்ந்துவரும் மக்களுக்கு புலம்பெயர் தமிழ் மக்களும், கொழும்பு மற்றும் கிழக்கு மாகாணம், மலையக பகுதிகளில் வாழும் தமிழ் மக்களும் தம்மால் முடிந்தளவு உதவிகளை வழங்குமாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி. விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆயிரக்கணக்கான மக்களின் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் மாற்று உடை இன்றி பெரிதும் அவதிப்படுவதாகவும் அதனால் அவர்களுக்கான மாற்று உடைகளை வழங்குவதற்கான உதவிகளையும் அடுத்த சில நாட்களுக்கான அத்தியாவசிய உலர் உணவு பொருட்களையும் வழங்கி உதவுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

குழந்தைகளுக்கான நுளம்பு வலைகள் மற்றும் பால் மா ஆகியவற்றுக்கான தேவையும் பெருமளவில் ஏற்பட்டுள்ளதாகவும் அவற்றையும் வழங்கி உதவுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு மற்றும் உடை ஆகியவற்றை வழங்கும் நடவடிக்கைகளை தமிழ் மக்கள் கூட்டணி மேற்கொண்டுள்ளதாகவும், அதேபோல வேறு பல அமைப்புக்களும் தொண்டு நிறுவனங்களும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருப்பதால் தமக்கு வசதியான வழிகளில் தமது உதவிகளை மேற்கொள்ளுமாறும் அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

முக்கியமாக மக்களின் கொடைகள் தேவையுடையோர் கைகளில் கிடைக்க வேண்டுமென்பதை ஊர்ஜிதப்படுத்துவது எல்லோரதும் கடமையாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

யாரேனும் தமது உதவிகளை தமிழ் மக்கள் கூட்டணி ஊடாக வழங்குவதாக இருந்தால் அவர்களை உடனே தம் கூட்டணியைச் சேர்ந்த அருந்தவபாலனை 0776186554 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுள்ளார். பொருட்கள் கொழும்பில் பொட்டலங்கள் ஆக்கப்பட்டு கிளிநொச்சிக்கு அனுப்பப்படவிருக்கின்றன.

முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் நாளைமறுதினம் புதன்கிழமை காலை கிளிநொச்சியில் வைத்து உதவிப் பொருட்களை தேவை உடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட பெறுநர்களிடம் அருந்தவபாலனுடனும் மற்றைய கூட்டணி அங்கத்தவர்களுடனும் கொடையினர்களுடனும் சேர்ந்து கையளிக்க0.வுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *