7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து!

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகின்றது. தம்புள்ளையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வந்தது. 2ஆவது போட்டியில் மழை பாதித்தாலும் டக் வொர்த் லீவிஸ் முறைப்படி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையே பல்லேகலே மைதானத்தில் மூன்றாவது போட்டி நேற்று பகல் – இரவு போட்டியாக நடைபெற்றது. மழையால் போட்டி 21 ஓவராக குறைக்கப்பட்டது.

நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச தேர்வு செய்தது. இலங்கை அணி சார்பில் நிரோஷன் திக்வெல்லவும், சதிர சமரவிக்ரமவும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

முதல் விக்கெட்டுக்கு 57 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் திக்வெலா 36 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து, சதிரவும் 35 ஓட்டங்களில் வெளியேறினார்.

அடுத்து களம் இறங்கிய துடுப்பாட்டக்காரர்கள் நீடித்து நிலைக்கவில்லை. இதனால் இலங்கை அணி நிர்ணயம் செய்யப்பட்ட 21 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்கள் எடுத்தது.

இங்கிலாந்து சார்பில் ஆதில் ரஷித் 4 விக்கெட்டும், டாம் கர்ரன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரராக களம் இறங்கிய ஜேசன் ரோய் அதிரடி காட்டி 26 பந்தில் 41 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தலைவர இயன் மார்கன் சிறப்பாக ஆடி அரை சதமடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். அவருக்கு பென் ஸ்டோக்ஸ் ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் இங்கிலாந்து அணி 18.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. அத்துடன், தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. ஆட்ட நாயகன் விருது ஆதில் ரஷித்துக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *