என்னைக் கொல்லும் ‘றோ’வின் சதி மோடிக்குத் தெரியாமல் இருக்கலாம்! – மைத்திரி கூறுகின்றார்

தன்னைக் கொல்ல இந்தியப் புலனாய்வுப் பிரிவான ‘றோ’ சதித் திட்டம் தீட்டியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ள குற்றச்சாட்டு, இந்திய – இலங்கை உறவுகளை தீவிரமாகப் பாதிக்கக் கூடிய ஒரு நடவடிக்கையாக இருக்கும் என்று இந்தியாவில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழான ‘தி ஹிந்து’ தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரி நேற்று நடந்த வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றியபோது, இந்தியப் புலனாய்வுப் பிரிவு தன்னைக் கொல்ல முயற்சிப்பதாக தனது அமைச்சர்களிடம் கூறியுள்ளார்.

ஆனால், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இது தெரியாமல் இருக்கக்கூடும் என்றும் மைத்திரி கூறினார் என அந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற வட்டாரங்களில் இருந்து அறியப்படுகின்றது.

“கைது செய்யப்பட்ட இந்தியர், என்னைக் கொல்ல முயற்சிக்கும் றோவின் முகவராக இருக்க வேண்டும். இதனை இந்தியப் பிரதமர் அறியாமல் இருக்கலாம். இது பெரும்பாலும் வழக்கம்தான். சி.ஐ.ஏயின் இது போன்ற நடவடிக்கைகள் ட்ரம்ப்புக்கும் தெரியாமல் இருக்கலாம்” என்று மைத்திரி உரையாற்றியுள்ளார்.

அவர் அப்படிக் கூறியது எமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று, தமது பெயரை வெளிப்படுத்த விரும்பாத ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.

இதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, ஜனாதிபதி செயலக ஊடகப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவருடன் தொடர்புகொண்ட போது, இதுபற்றி ஆராய்ந்து பதிலளிப்பதாகக் கூறினார். எனினும், இதுவரை அவரிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதுடில்லிக்குப் பயணம் மேற்கொள்வதற்கு – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இருதரப்பு விவகாரங்கள் குறித்துப் பேசுவதற்கு சில நாட்கள் முன்னதாக ஜனாதிபதி மைத்திரி இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றார்.

எனினும், இந்தியப் புலனாய்வுப் பிரிவு மீது இலங்கை ஜனாதிபதி ஒருவர் குற்றச்சாட்டை முன்வைப்பது இது தான் முதல்முறையல்ல. 2015 ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், மஹிந்த ராஜபக்ஷவும், தனது தோல்விக்கு இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ தான் காரணம் என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இதேவேளை, ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுப் பிற்பகல் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பு நிறுத்தப்பட்டதற்கான காரணத்தை ஜனாதிபதியின் ஆலோசகர் சிறிலால் லக்திலகவிடம், வினவியபோது, மேலதிக தகவல்களுக்காக காத்திருப்பதால் செய்தியாளர் சந்திப்பு நிறுத்தப்பட்டது எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *