குளவி தாக்கி பாட்டியும் பேரனும் பலி! – தெனியாயவில் சோகம்
தெனியாய, கிரிவெல்தொல, ஹிங்குரெஹேன பகுதியில் குளவி தாக்கியதில் ஆண் குழந்தையும், அந்தக் குழந்தையின் பாட்டியும் உயிரிழந்துள்ளனர்.
கிரிவெல்தொல, ஹிங்குரெஹேன பகுதியைச் சேர்ந்த 2 வயதுடைய இந்தூஷ காரிந்த என்ற குழந்தையும், 68 வயதான கருணாவதீ வன்னியாரச்சி என்ற குழந்தையின் பாட்டியுமே உயிரிழந்துள்ளனர்.
வீட்டின் கூரையில் இருந்த குளவிக்கூடு கலைந்த சந்தர்ப்பத்தில் குழந்தையின் பெற்றோர்கள் வீட்டில் இருக்கவில்லை எனவும், குழந்தையும் பாட்டியும் மட்டுமே வீட்டில் இருந்தார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இருவரையும் குளவி தாக்குவதை அவதானித்த அயலவர்கள் மற்றும் உறவினர்கள் அவர்களை மீட்டு தெனியாய வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
வைத்தியசாலையில் சேர்க்கும்போதே குழந்தை உயிரிழந்திருந்தது எனவும், சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது பாட்டி உயிரிழந்துள்ளார் எனவும் வைத்தியாசலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த இருவரின் பிரேத பரிசோதனை தெனியாய வைத்தியசாலையில் இடம்பெறஉள்ளது.
சம்பவம் தொடர்பில் தெனியாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.