மங்களவுடனான உறவு: மனம் திறக்கிறார் மஹிந்த!
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்வைக்கபதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் மங்கள முனசிங்கவுக்கும் தனக்கும் இடையிலான நட்புறவு குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றில் மனம் திறந்தார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது. தினப்பணிகள் முடிவடைந்த பின்னர் அமரர் மங்கள முனசிங்கவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதம் ஆரம்பமானது.
இவ்விவாதத்தில் உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ,
“தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தைத் தயாரிப்பதற்காக நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவுக்கு மங்கள முனசிங்கவே தலைமையேற்றார். இப்பணியை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.
தேர்தலொன்றில் நாம் இருவருமே தோல்வியடைந்தோம். அதன்பின்னர் கட்சித் தலைமையகம் வந்தோம். வெளிநாடொன்றில் தொழில் பயிற்சி பெறுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. இருவரும் ஒரே அறையில் – ஒரு மாதம் வரை தங்கியிருந்தே பயிற்சி பெற்றோம். அதன் பின்னரே நட்புறவு வலுப்பெற்றது” – என்றார்.