பாரிய ஊழல், மோசடிகள் தொடர்பில் 1,599 முறைப்பாடுகள்!
பாரிய ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு ஆயிரத்து 599 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சரான ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்றின்போது ஜே.வி.பியின் எம்.பியான பிமல் ரத்னாயக்கவால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பாரிய மோசடி, ஊழல், அதிகார துஷ்பிரயோகம், அரச சொத்துகள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் திகதி நிறுவப்பட்டது.
அன்றிலிருந்து 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி வரை ஆயிரத்து 599 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவ்வாறு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுள் 401 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளன” – என்றார்.