பிலிப்பைன்ஸில் அசுரப்புயல் : பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு
பிலிப்பைன்ஸை மையங்கொண்ட மொங்குட் சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது.
மேலும் பலர் காணாமல் போயுள்ள நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது.
நேற்று (சனிக்கிழமை) தாக்கிய இந்த சூறாவளியானது, இந்த ஆண்டில் அந்நாடு எதிர்கொண்ட மிக மோசமான இயற்கை அனர்த்தமென தெரிவிக்கப்படுகிறது.
சூறாவளியைத் தொடர்ந்து மரங்கள் முறிந்து வீதிகளில் விழுந்துள்ளதோடு, கூரைகள் வீசியெறியப்பட்டுள்ளன. அத்தோடு, 42 மண்சரிவுகளும் பதிவாகியுள்ளதோடு, வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
இதனால் பாரிய சொத்தழிவு ஏற்பட்டுள்ளதோடு, மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பிலிப்பைன்ஸின் ககயன் மாகாணத்திலுள்ள விவசாய பிரதேசத்தில் பயிர்செய்கைகளை மேற்கொள்ளும் நிலங்கள் பாரியளவில் சேதமடைந்துள்ளன.