கொரியப் பிராந்தியத்தில் அமைதியையே இலங்கை விரும்புகின்றது!
தென்கொரியா கைத்தொழில் மற்றும் வணிகத் துறையில் தகவல் தொழிநுட்பத்தைப் பயன்படுத்துவதில் மிகவும் முன்னேறியுள்ளமையால், அத்தொழிநுட்பம் மற்றும் அனுபவங்களை இலங்கை உட்பட ஆசிய நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளும் விருப்புடன் தாம் உள்ளதாக தென்கொரிய வெளிநாட்டமைச்சர் கங் குயுங் வா Kang Kyung Wha)) குறிப்பிட்டார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தென்கொரிய கைத்தொழில் வலயமொன்றை நிறுவுவது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இவ்வாறான கைத்தொழில் வலயம் ஊடாக இரு நாடுகளுக்கும் நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமான பல வழிகள் புதிதாகத் திறந்து விடப்படுவதாக அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம சுட்டிக் காட்டினார்.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைதி மற்றும் சுதந்திர கப்பற் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்கு இலங்கை மேற்கொள்ளும் முயற்சியைப் பாராட்டிய தென்கொரிய வெளிநாட்டமைச்சர், தாம் எப்போதும் அனைத்துப் பிரச்சினைகளையும் கலந்துரையாடல் மூலம் சுமுகமாகத் தீர்த்துக் கொள்ளும் வழிமுறையைப் பின்பற்றுவதாகக் கூறினார்.
கொரியப் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாகவும் இதன்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
கொரியப் பிராந்தியத்தில் அமைதியையே இலங்கை விரும்புகின்றது என்று இதன்போது பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.