இந்தியாவின் பொறிக்குள் மஹிந்த! – ராகுல், மன்மோகன் சிங்குடனும் அவர் சந்திப்பு
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை காங்கிரஸ் கட்சித் தலைவர்களைச் சந்தித்துள்ளார்.
இன்று காலை இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை புதுடில்லியில் மஹிந்த சந்தித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இந்திய விஜயத்தின்போது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்தார்.
முன்னாள் ஜனாதிபதி தனது மகன் நாமல் ராஜபக்ஷவுடன் இந்தியாவுக்கு மேற்கொண்டிருக்கும் விஜயத்தின் பின்புலம் என்ன?
நாட்டின் ஜனாதிபதியாக மஹிந்த செயற்பட்ட போது சீனாவுடன் நெருங்கிய உறவுகளைப் பேணியமை இரகசியமான விடயம் அல்ல.
கொழும்புத் துறைமுக நகரம், அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தளை விமான நிலையம், அதிவேக வீதி உள்ளிட்ட பல பாரிய திட்டங்களை அவர் சீனாவுடன் இணைந்தே நடைமுறைப்படுத்தினார்.
எனினும், தற்போது மஹிந்த இந்தியாவுடன் நெருங்கி செயற்படுகின்றமை புலப்படுகின்றது.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பாரதிய ஜனதாக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமியின் அழைப்பை ஏற்றே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.