பாலில் புலிகள் விஷம் கலக்கவில்லை! நல்லாட்சி அரசு அதையும் செய்துள்ளது!! – சாடுகின்றார் கம்மன்பில
கொடூரமான பயங்கரவாத அமைப்பாக விளங்கிய விடுதலைப்புலிகள் அமைப்புகூட சிங்கள மக்களுக்கு எதிராக செய்யாத ஒரு காரியத்தை நல்லாட்சி அரசு செய்து விட்டது என புதிய ஹெல உறுமயவின் தலைவரான உதய கம்மன்பில எம்.பி. தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனபலய போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்குப் பருகுவதற்கு வழங்கப்பட்ட பால பைக்கற்றில் விஷம் கலக்கப்பட்டுள்ளமையானது கீழ்த்தரமான செயற்படாகும். வங்குரோத்து அரசியலின் உச்சகட்டமாகவே அதைக் கருதவேண்டும்.
இலங்கை அரசியல் வரலாற்றில் போராட்டக்காரர்களுக்கு பாலில் விஷம் கலந்து பகிரப்பட்டுள்ளது இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.
மாவிலாறுவை மூடி, சிங்கள மக்களுக்கு நீரை வழங்க மறுத்த விடுதலைப்புலிகள் அமைப்புகூட ஒருநாளும் தண்ணீரில் விஷம் கலக்கவில்லை. ஆனால், நல்லாட்சி அரசு அதையும் செய்துள்ளது” – என்றார்.
பால் பைக்கற்றில் விஷம் கலந்த விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு மஹிந்த அணியினர் சி.ஐ.டியிலும், ஏனைய சில பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.