சஜித் அணியை கூண்டோடு அழிக்க தயாராகும் ரணில் அணி!
சஜித் பிரேமதாச உட்பட ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ள ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் விரைவில் கட்சியில் இருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கப்படுவார்கள் – என்று ரணில் ஆதரவு அணி உறுப்பினரான ஆசுமாரசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் ஊடரங்கு சட்டம் நீக்கப்பட்ட பின்னர் இதற்கான சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க மேலும் கூறியவை வருமாறு,
” சஜித் பிரேமதாச என்பவர் தற்போது ஐக்கிய தேசியக்கட்சியை சார்ந்தவர் அல்லர். அவர் தலைமையிலான அணியினர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்து அதன்கீழ் பொதுத்தேர்தலிலும் போட்டியிடுகின்றனர்.
பிரிதொரு கட்சியின் சார்பில் வேட்புமனு கையளித்த நாளில் இருந்தே அவர்களின் கட்சி உறுப்புரிமை கொள்கை அடிப்படையில் நீக்கப்பட்டது. எனவே, விரைவில் தீர்மானம் எடுக்கப்பட்டு அது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
கொழும்பில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது. எனவே, சட்டரீதியிலான நடவடிக்கைக்கு உடனடியாக செல்வது கடினம். சாதாரண நிலை ஏற்பட்ட பின்னர் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்.
அதேவேளை, பொதுத்தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக்கட்சியையும் அதன் தலைமையகமான சிறிகொத்தவையும் மக்கள் ஆணையுடன் கைப்பற்றுவோம் என சஜித் ஆதரவு அணி உறுப்பினரான நளின் பண்டார அண்மையில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.