கென்சிங்டன் அரணமனை அருகே டயானா பெயரில் தேநீர் கடை
லண்டனில் கென்சிங்டன் அரணமனை அருகே சின்னதாய் இயங்கும் ஒரு தேநீர் கடை இளவரசி டயானா பெயரில் இயங்குவதுடன், அவர் நினைவையும் போற்றிவருகிறது.
1989ல் பாகிஸ்தானை சேர்ந்த அப்துல் என்பவரால் கென்சிங்டன் அரணமனை அருகே சின்னதாய் ஒரு தேநீர் கடை திறக்கப்பட்டுள்ளது. கடைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்ற குழப்பத்தில் இருந்த போது, இளவரசி டயானாவும் அவரது இரு பிள்ளைகளும் அரணமனை வாசல் கடந்து வெளியே வருவது அப்துல் பார்வையில் பட்டுள்ளது.
அதன் பிறகு கடைக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்ற குழப்பம் தீர்ந்தது என்றும், தமது குட்டி கடைக்கு டயானா கஃபே என பெயர் சூட்டியதாகவும் அப்துல் தெரிவித்துள்ளார்.
1989 ஜனவரி மாதம் புதிதாக தேநீர் கடையை திறக்கும் போது அப்துலுக்கு தெரியாது, எதிரே அமைந்துள்ள கென்சிங்டன் அரணமனையில் இளவரசி டயானாவும் அவரது இரு பிள்ளைகளும் வசித்து வருகிறார்கள் என்பது.
அடுத்த முறை கடையை கடந்து செல்லும் போது அப்துலை பார்த்து இளவரசி டயானா புன்னகைத்துள்ளார். அதன் பிறகு எப்போதெல்லாம் டயானாவும் பிள்ளைகளும் அந்த வழியாக கடந்து செல்ல நேர்ந்தால், அப்துலுக்கு கை வீசுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
ஒருமுறை இளவரசி டயானா திடீரென்று கடைக்கு விஜயம் செய்துள்ளார். மிரண்டு போன அப்துல் சில நிமிடங்கள் செய்வதறியாது திகைத்துள்ளார். டயானா தனக்கென ஒரு கப்புசினோவையும் தனது காவலருக்கு ஒரு எஸ்பிரெசோவையும் ஆர்டர் செய்துள்ளார்.
பிறகு அப்துலிடம், கடைக்கு டயானா என பெயர் வைத்துள்ளீர்களே, டயானா உங்கள் மனைவியா அல்லது காதலியா? யார் என கிண்டலுடன் கேள்வி எழுப்பியுள்ளார். அப்துல் மிகவும் பணிவுடன், உங்களையும் உங்கள் உழைப்பையும் நான் மிகவும் மதிக்கிறேன், அதனால் கடைக்கு உங்கள் பெயரை வைத்துள்ளேன் என கூறியுள்ளார்.
அதன் பிறகு டயானாவும் அவரது இரு பிள்ளைகளும் அடிக்கடி டயானா கஃபேவுக்கு சாப்பிட சென்றுள்ளனர். ஒருமுறை இளவரசர் ஹரியும் அவரது ஆயாவும் அப்துல் கடைக்கு சென்றுள்ளனர்.
தாம் டயானா கஃபேவுக்கு சென்றதை சகோதரர் வில்லியமிடம் கண்டிப்பாக கூறுவேன் என சொன்ன ஹரியை கண்டித்த அவரது ஆயா, இங்கே எல்லாம் நீங்கள் வரக் கூடாது, வந்தாலும் அதை வெளியே சொல்லக் கூடாது என அதட்டியுள்ளார்.
ஆனால் அடுத்த நாள் இளவரசர் வில்லியம் தனியாக கடைக்கு வந்துள்ளதையும், அப்துல் அனுப்பி வைத்த தின்பண்டத்திற்கு நன்றி தெரிவித்ததுடன், பணம் செலுத்த கட்டாயப்படுத்தியதாகவும் அப்துல் நினைவு கூர்ந்துள்ளார்.
தற்போதும் இளவரசர் வில்லியம் அந்த வழியாக கடந்து செல்லும் போது தமக்கு கைவீசுவது உண்டு என்றும் அப்துல் தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது, தமக்கு கென்சிங்டன் அரணமனை உதவியதையும் அப்துல் நினைவு கூர்ந்துள்ளார்.