முஸ்லிம் மக்களுக்கு அநீதி – புதிய சட்டம் விரைவில்
முஸ்லிம்களின் ஜனாசாக்கள் நல்லடக்கம் செய்ய முடியாமல் தகனம் செய்யும் நிலை ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கவும் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஏறாவூர் அஹமட் பரீட் விளையாட்டரங்கில் (23) நடைபெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார்.
முஸ்லிம் மக்களுக்கு அநீதி ஏற்பட்டது. முஸ்லிம்களின் ஜனாசாக்கள் நல்லடக்கம் செய்ய முடியாமல் தகனம் செய்யும் நிலை ஏற்பட்டது. இவ்வாறானதொரு நிலை மீண்டும் ஏற்படாதிருக்க புதிய சட்டமொன்றைக் கொண்டுவருகிறேன்.
விரும்பியோர் நல்லடக்கம் செய்யவும், தகனம் செய்யவும், விரும்புவோர் உடலை மருத்துவ பீடத்திற்கு ஒப்படைக்கவும் முடியும். அமைச்சர் அலி சப்ரி இந்தச் சட்டத்தை அமைச்சரவைக்கு கொண்டுவந்த பின்னர் நாம் வர்த்தமானியில் வெளியிடுவோம். ஏன் சஜித், அநுர இவ்வாறான சட்டமூலத்தை கொண்டுவரவில்லை. எந்தவொரு உறுப்பினருக்கும் இந்த சட்டமூலத்தைக் கொண்டு வந்திருக்கலாம்.
இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கவும் குழுவொன்றை நியமிக்கவுள்ளேன். கடந்த அரசாங்க காலத்தில் இது நிகழ்ந்திருந்தாலும் இந்தச் சம்பவத்திற்கு அரசாங்கம் என்ற ரீதியில் முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கோருகிறோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்