இலங்கையில் 4500 பேர் வரி செலுத்தத் தவறியுள்ளனர்: 1131.5 பில்லியன் ரூபா நிலுவையில்
இலங்கையில் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் திகதியாகும் போது செலுத்தத் தவறிய மொத்த வரித்தொகை 1131.5 பில்லியன் ரூபாய் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள கூறுவதாக சிங்கள ஞாயிறு வார இதழான லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் அதிகமான தொகை உள்நாட்டு வருமான வரித் திணைக்களத்துக்கு இழக்கப்பட்டுள்ளதாகவும், திணைக்களத்துக்கு செலுத்த தவறியுள்ள மொத்த வரியின் தொகை 1066 பில்லியன் ரூபாய் எனவும் தெரிவித்தார்.
உள்நாட்டு வருமான வரித் திணைக்களத்துக்கு இழக்கப்பட்ட வரித்தொகையில் 18,800 கோடி ரூபாய் நிலுவையில் உள்ள தொகை எனவும் 87,880 பில்லியன் ரூபாய் தடுப்பு வரி எனவும் பேராசிரியர் தெரிவித்தார்.
இந்நிலையில், இலங்கை சுங்க திணைக்களத்துக்கு செலுத்தத் தவறிய வரியின் மொத்தப் பெறுமதி 58.6 பில்லியன் ரூபாய் ஆகும்.
இலங்கை கலால் திணைக்களத்துக்கு செலுத்தவுள்ள தொகை 6.9 பில்லியன் ஆகும்.
2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் திகதியாகும் போது 4,479 பேர் வரி செலுத்தத் தவறியுள்ளதாகவும் அவர்களுள் ஒரு பில்லியனுக்கும் அதிகமான வரியை செலுத்த தவறியவர்கள் 90 பேர் எனவும் தெரிவித்த பேராசிரியர் 500-1000 மில்லியனுக்கும் இடைப்பட்ட தொகை வரியை 88 பேர் செலுத்தத் தவறியுள்ளதாகவும், 500-300 மில்லியன் வரியை செலுத்தத் தவறியர்கள் 104 பேரும் ஆவர்.
மேலும், 300-100 மில்லியன் வரியை செலுத்தத் தவறியவர்கள் 457 பேரும், 100-50 மில்லியன் வரியை செலுத்தத் தவறியவர்கள் 632 பேரும், 50-10 மில்லியன் ரூபாய் வரியை செலுத்தத் தவறியவர்கள் 3108 பேரும் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.