சஜித் ஆட்சியில் மின் கட்டணம் 40 வீதம் குறையும்?
பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் விசா மோசடி மூலம் நாட்டின் எல்லைகளை இந்தியாவில் பெட்டிக்கடையொன்றுக்கு காட்டிக்கொடுத்துள்ளதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை வரலாற்றில் மிகப்பெரும் மோசடியாக கருதப்படும் இந்த மோசடி தொடர்பில் அனுரகுமார திஸாநாயக்கவும் தேசிய மக்கள் சக்தியும் பேசுவதில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து மொரட்டுவையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய சம்பிக்க ரணவக்க, மேலும் கூறியதாவது,
“செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறப்போகும் ஜனாதிபதித் தேர்தல் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை போன்று சாதாரண தேர்தலாக இருக்காது.
வங்குரோத்தடைந்துள்ள நாட்டிலேயே ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகிறது.
1815ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் திகதி நாம் சுதந்திரம் மற்றும் இறையாண்மையை இழந்தது போல், 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் திகதி இறையாண்மையை இழந்து, நமது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பொறுப்பை கடனாளிகளிடம் விட்டுவிட்ட நாட்டிலேயே ஜனாதிபதித் தேர்தலை நடத்துகிறோம்.
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் சஜித் பிரேமதாச ஆளுங்கட்சியின் வேட்பாளராகவும், கோட்டாபய ராஜபக்ச எதிர்க்கட்சி வேட்பாளராக களமிறங்கியிருந்தனர். ஆனால் இம்முறை அரசாங்கத்தின் வேட்பாளர் முதல் இரண்டு போட்டியாளர்களில் இல்லை.
இன்றைய போட்டியில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி அணிகள் மோதுகின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
இந்த நாடு தற்காலிக ஸ்திரத்தன்மையையே பெற்றுள்ளது. இன்று 2022 ஆம் ஆண்டைப் போல பெரிய அளவிலான எரிபொருள் வரிசைகள் இல்லை. மின்வெட்டு இல்லை. மருந்து, உரம் இருக்குன்னு சொல்றோம்.
ஆனால், 2015ஆம் ஆண்டு எமது ஆட்சியில் எரிபொருள் விலையைக் குறைத்தோம். பெட்ரோல் விலை ரூ.154 ரூபாவில் இருந்து 117 ரூபாவாக குறைக்கப்பட்டது. டீசல் விலை 134 ரூபாவில் இருந்து 95 ரூபாவாக குறைக்கப்பட்டதை நினைவுபடுத்த விரும்புகிறோம்.
மின் கட்டணம் குறைக்கப்பட்டது. அரச நிறுவனங்களை இலாபகரமாக மாற்றி அந்த பயனை மக்களுக்கு வழங்கினோம். ஆனால் இன்று மின்சார அலகுக்கான கட்டணம் மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. எமது ஆட்சியில் 40 வீதத்தால் மின் கட்டணம் மீண்டும் குறைக்கப்படும்.
எரிபொருள் விலை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. மருந்து விலை நான்கு முதல் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. உரத்தின் விலை ஏழு முதல் எட்டு மடங்கு அதிகரித்துள்ளது.
இந்த நிலையை தடுக்கும் அனுபவமிக்க குழுவினர் நாட்டைப் பொறுப்பேற்று முன்னேற்றப் பாடுபட வேண்டும். சஜித் பிரேமதாசவிடம் அந்த அனுபவமிக்க குழு உள்ளது.” என்றார்.