விமான விபத்து – 62 பேர் பலி!
பிரேஸில் நாட்டில் 62 பயணிகளுடன் சென்ற விமானம் ஒன்று நேற்று (09) விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இதில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பிருப்பதாக அந்த நாட்டு அதிபா் லூலா டாசில்வா தெரிவித்துள்ளார்.
சா பாலோ சா்வதேச விமான நிலையமான குவாருல்ஹோஸுக்கு 58 பயணிகள் மற்றும் 4 விமானப் பணியாளா்களுடன் சென்ற தங்களின் விமானம் விபத்துக்குள்ளானதாக வோபாஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியது.
வின்ஹீடோ நகா்ப் பகுதியில் விபத்துக்குள்ளான விமானம் கீழே விழுந்ததாக அந்த நகரின் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறை குழுக்கள் விரைந்துள்ளன.
வீடுகள் நிறைந்த குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பற்றியதில் புகை வெளியாவதைப் போன்ற வீடியோ காட்சிகள் பிரேஸில் ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டன.
Se estrella un avión ✈️ en Vinhedo, São Paulo, #Brasil
Sao Paulo #VideoExclusivo del momento que cae pic.twitter.com/S0Or4OAIXd
— Poncho Muñoz (@PonchoMunoz) August 9, 2024
மற்றொரு வீடியோவில் வானில் பறந்த விமானம் நிலைதடுமாறி செங்குத்தாக தரையில் விழும் காட்சிகளும் ஒளிபரப்பப்பட்டன.
தெற்கு பிரேஸிலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அந்த நாட்டு அதிபா் லூலா டாசில்வா, விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பிருப்பதாகக் கூறி அங்கு கூடியிருந்த பொதுமக்களை ஒரு நிமிடம் அமைதியாக எழுந்து நிற்குமாறு கேட்டுக்கொண்டாா்.