Local

ரணிலை ஆதரிக்க பசிலை சந்தித்த சம்பிக்க ரணவக்க

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவிற்கும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வாரத்தின் ஆரம்பத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாகவும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை சில தினங்களுக்கு முன்னர் இரண்டு தடவைகள் சந்தித்த பின்னர் இந்த சந்திப்பு இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தியபண்டார மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரின் தலையீட்டில் சஜித் உடனான சந்திப்புகள் இடம்பெற்றிருந்தன.

எவ்வாறாயினும், சம்பிக்க ரணவக்க, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவதற்குத் தயாராக இருந்த போதிலும், சஜித் பிரேமதாச அது தொடர்பில் அக்கறை காட்டவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், சமகால ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க சம்பிக்க ரணவக்க தயாராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, ஒருபகுதியாக ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படுவதால் ஏற்படும் முரண்பாடுகளை தீர்க்கும் நோக்கில், மேற்படி பசில் ராஜபக்சவுடனான சந்திப்பு இடம்பெற்றதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்கிரமசிங்கவுடன் நேரடியாக இணையாது நிமல் லான்சா மற்றும் பலர் இணைந்து கட்டியெழுப்பிய புதிய கூட்டணியில் இணைந்து, அதன் ஊடாக ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க சம்பிக்க ரணவக்க முடிவுசெய்துள்ளதாக கூறப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading