இலங்கை கொத்மலையில் நிலத்தின் கீழ் கேட்கும் அமானுஷ்யமான சத்தம்;மக்கள் வெளியேற்றம்!
கொத்மலை, வேத்தலாவ எனும் கிராமத்தில் நிலத்தின் கீழ் இருந்து அமானுஷ்யமான சத்தங்கள் கேட்பதாக கிராம மக்கள் அளித்துள்ள தகவலுக்கு அமைய, இன்று ( 15) முதல் அக்கிராமத்தில் வசிக்கும் 50 குடும்பங்களை, இரவு நேரத்தில் மட்டும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொடவுக்கு வழங்கப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கு அமைய இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இந்த கிராமமானது மலைகள் அற்ற ஒரு சமவெளிப் பகுதியில் அமைந்த்துள்ளதாக தெரிவித்த நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட, அங்கு வழமையாக நிலத்துக்கு கீழ் இருந்து பல்வேறு சத்தங்கள் கேட்பதாக தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாகவும், அதன் அடிப்படையிலேயே இன்று முதல் அவர்களை பாதுகாப்பான இடங்களில் இரவு வேளையில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்நிலைமையானது அச்சப்படுவதற்கான காரணியாக இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும், எனினும் நுவரெலியா மாவட்ட கட்டிட ஆய்வு மைய அதிகாரிகளின் உதவியோடு குறித்த கிராமம் தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுக்க நடவடிக்க எடுக்கப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட மேலும் தெரிவித்தார்.