தமிழ் கட்சிகளின் தலையணையை மாற்றினால் தலைவலி போய்விடும்
தமிழ்த் தலைமைகளின் சாபக்கேடு!!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தில் மாற்றம் செய்யப்பட்டால், மீண்டும் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாக, ஊடகச் செவ்வி ஒன்றில் வெளியிட்ட கருத்தின் மூலம், அரசியல் வட்டாரங்களில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் சி.வி.விக்னேஸ்வரன்.
அவரது இந்தக் கருத்தை சாதகமானதாக பார்ப்பதாக கூறியிருக்கிறார் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன்.
மற்றொரு பங்காளிக் கட்சியின் தலைவரான புளொட் தலைவர் சித்தார்த்தனும், இதனை வரவேற்றிருந்தாலும், கூட்டமைப்பின் தலைமைத்துவ மாற்றம் உடனடிச் சாத்தியமற்றது என்ற வகையில் கருத்து வெளியிட்டிருக்கிறார்.
ஆனால், பிரதான பங்காளிக் கட்சியான தமிழரசுக் கட்சியின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன், கூட்டமைப்பு தலைமைத்துவத்தில் இப்போது மாற்றங்கள் செய்யப்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறியிருக்கிறார்.
சி.வி.விக்னேஸ்வரன் மாத்திரமன்றி, வீ.ஆனந்தசங்கரியும் கூட, கூட்டமைப்பில் உள்ள இரா.சம்பந்தன், எம்,ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராசா தவிர்ந்த ஏனையோருடன் இணைந்து செயற்படத் தயார் என்றே கூறுகிறார்கள். கூட்டமைப்பில் அதிகாரம் செலுத்தும் நிலையில் இரா.சம்பந்தன், சுமந்திரன் போன்றவர்கள் இருப்பது தான், வீ.ஆனந்தசங்கரி, சி.வி.விக்னேஸ்வரன் ஆகியவர்களுக்கு மாத்திரமன்றி, சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றவர்களுக்கும் பிரச்சினையாக இருக்கிறது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் நிலை வேறு. அவர் எந்த அணியுடனும் சேரத் தயாராக இல்லை.
கூட்டமைப்பின் தலைமைத்துவத்துடன், குறிப்பாக எம்,ஏ.சுமந்திரனுடன் முரண்பட்டுக் கொண்டு வெளியேறியவர்கள் தான் அதிகம். சுமந்திரன் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கிறார் என்பது இவர்கள் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ முன்வைக்கின்ற குற்றச்சாட்டாக இருந்து வந்திருக்கிறது.
சம்பந்தனே கூட்டமைப்பின் தலைவராக இருந்தபோதும், சுமந்திரனே செயற்பாட்டுத் தலைவர் போல இருக்கிறார் என்பது வெளிப்படையான உண்மை. அந்த விடயத்தில் கட்சிக்குள் கூட, முரண்பாடுகள், மாற்றுக் கருத்துக்கள் உள்ளன.
கூட்டமைப்பின் மூத்த தலைவர்களான இரா.சம்பந்தன், மாவை ஆகியோருடன், சுமந்திரனையும் ஒதுக்கிவிட்டால், அதனுடன் இணைந்து செயற்பட பலரும் தயாராகவே இருப்பதாக கூறிக் கொண்டாலும், அது நடைமுறைச் சாத்தியமான ஒன்றா என்பது சந்தேகம் தான்.
சி.வி.விக்னேஸ்வரன் எதிர்பார்ப்பது போல, கூட்டமைப்பின் தலைமைத்துவம் மாற்றப்படுவது என்பது, இயல்பான சூழலில் நடக்க வேண்டுமே தவிர, ஒரு முன்நிபந்தனைக்குட்பட்டதாக அது இடம்பெற வாய்ப்பில்லை.
அவ்வாறு தலைமைத்துவம் மாற்றப்பட்டால், கூட்டமைப்பில் ஆளுகை செலுத்தப் போவது யார் என்ற கேள்வியும் உள்ளது.
கூட்டுத் தலைமைத்துவம், அதற்கான பொறிமுறைகள் என்பன காத்திரமான யோசனைகளாக இருந்தாலும், அதனைச் செயற்படுத்துவதற்கு 2020 பொதுத்தேர்தலுக்கு முன்னதாக உள்ள குறுகிய இடைவெளி போதாது.
ஏனென்றால், சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான மாற்றுஅணியே தமக்குள் ஒரு உடன்பாட்டை செய்து கொள்ள முடியாமல் திணறுகிறது. அதில் சிறிய கட்சிகள் தான் அங்கம் வகிக்கின்ற போதும், அந்த மாற்று அணிக்குரிய தலைமைத்துவத்தை ஏற்படுத்துவதில், ஆசனங்களைப் பகிர்ந்து கொள்வதில் இன்னமும் உடன்பாட்டை எட்ட முடியவில்லை.
கூட்டணி அறிவிப்பு இதோ வெளியாகிறது என்று பலமுறை செய்திகள் வெளியாகி விட்டன.
ஆனால் அந்த அறிவிப்பு மாத்திரம் வரவில்லை. தனியே ‘பொங்கல் பானை’ தான் தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னம் என்று மட்டும் கூறியிருக்கிறார் சி.வி.விக்னேஸ்வரன்.
அந்த அறிவிப்பைக் கூட ‘பொங்கல் பானை’ தான் எமது சின்னம் என்று அவர் முறையாக அறிவிக்கவில்லை.
‘‘பொங்கல் பானை’ தான் தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னம் என்று உங்களுக்குக் கூறித் தெரிய வேண்டியதில்லை” என்று அவர் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் மறைமுகமாகத் தான் குறிப்பட்டிருந்தார்.
ஏன் அவர் அவ்வாறு பூடகமான வாக்கியத்தை அமைத்தார் என்பது மர்மமாகவே உள்ளது. ஏனென்றால் அது சாதாரண மக்களால் இலகுவில் விளங்கிக் கொள்ள முடியாதது.
அதைவிட, பொங்கல் பானை சின்னத்தை முன்னர் யாரும் அறிந்திருக்கவும் இல்லை.
மற்றொரு புறத்தில் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆசன ஒதுக்கீடு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒரு உடன்பாடு எட்டப்பட்டு விட்டது.
அதிலும் ரெலோ, யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியில் நிறுத்துகின்ற தமது வேட்பாளராக சுரேந்திரன் குருசாமி என்பவரை அறிவித்து விட்டது.
நாடாளுமன்றம் கலைக்கப்படாமல், பொதுத்தேர்தல் அறிவிப்பே வெளியிடப்படாத நிலையில், நாடு முழுவதிலுமே, அறிவிக்கப்பட்டுள்ள முதல் வேட்பாளர் இவர் தான்.
இவ்வாறாக தேர்தலுக்கான தயாரிப்புகளில் கட்சிகள் இறங்கியுள்ள நிலையில் தான், தலைமையை மாற்றினால் இணைந்து செயற்படத் தயார் என்று அறிவித்திருக்கிறார் சி.வி.விக்னேஸ்வரன்.
தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒற்றுமை இருக்க வேண்டும் என்பது, தமிழ் மக்களால் வருத்தத்துடன் சுட்டிக்காட்டப்படுகின்ற விடயமாக இருந்தாலும், அதனை தமிழ் அரசியல் கட்சிகளோ, தலைமைகளோ கண்டு கொள்வதாக இல்லை.
கட்சிகளை உடைத்து புதிய கட்சிகளை உருவாக்குவதும், புதிய கூட்டுகள், அணிகளை உருவாக்குவதுமாக இருக்கின்றன.
ஒரு பக்கத்தில் அரசாங்கம் தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களுக்கு சாதகமான சட்டங்களை மாற்றியமைக்கத் திட்டமிட்டுள்ளது. அதற்காக பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு ஆசனங்களைக் கைப்பற்றி நாடாளுமன்றத்தை வசப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் உள்ளக மோதல்களால் சீரழிந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறானதொரு நிலையில், தமிழ்மக்களின் பலம், தெளிவான முறையில் உறுதிப்படுத்தப்பட வேண்டியது முக்கியம்.
அதற்கு, தமிழ்க் கட்சிகள் பிரிந்து சிதறி போட்டியிடாமல், ஒருங்கிணைந்து போட்டியிட வேண்டும். ஆனால் தமிழ்க் கட்சிகள் மத்தியில் அத்தகைய ஒற்றுமையும் இல்லை, அவ்வாறு போட்டியிடும் எண்ணமும் இல்லை.
தனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு சகுனப் பிழையாகி விட வேண்டும் என்பது தான், பெரும்பாலான தமிழ்க் கட்சிகளின் இலக்காக இருக்கிறது.
தமிழ் அரசியல் தலைவர்கள் என்று கூறிக் கொள்ளுகின்ற அத்தனை பேரும், இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல.
இவ்வாறானதொரு மனோநிலையில் இருந்து கொண்டு, தமிழ் அரசியல் தரப்புகள் அனைத்தையும் ஒன்றிணைப்பது சாத்தியமானது அல்ல.
பல கட்சிகளைக் கொண்டு வந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கமும் கூட, விடுதலைப் புலிகளின் ஆயுதபலத்தினால் தான் சாத்தியமானது. கூட்டமைப்புக்கு புலிகளின் ஆசி இருந்ததால், அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, வெளிப்படையாக அரசியல் செய்ய பல கட்சிகள் முன்வந்தன.
அதுபோன்றதொரு மேலாதிக்கம் செலுத்தக்கூடிய நபர்களோ, அமைப்புகளோ எதுவும் தற்போது கிடையாது. அதனால் தமிழ்க் கட்சிகள் ஒவ்வொன்றும் தமது நலன்களை அடிப்படையாக வைத்தே செயற்படுகின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுயநலமாகச் செயற்படுகிறது என்ற விமர்சனங்களில் எந்தளவுக்கு நியாயம் உள்ளதோ, அதேயளவுக்கு அதற்கு மாற்றான அரசியல் செய்யும் கட்சிகள், தரப்புகளின் செயற்பாடுகளிலும் விமர்சனங்கள் உள்ளன.
தலைமையை மாற்றினால் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படலாம் என்று இப்போது கூறும் சி.வி.விக்னேஸ்வரன், அந்த தலைமை மாற்றம் தான் பிரச்சினை என்றால், அந்த மாற்றத்துக்காக அவர் ஏன் உள்ளிருந்தே போராடவில்லை?
உள்ளிருந்து போராடி, தலைமைத்துவத்தை மாற்ற முயன்றிருக்கலாம். அதற்கான ஆதரவையும், தளத்தையும் கட்டியெழுப்பியிருக்கலாம்.
இதே வாதம், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும், சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கும், சிவாஜிலிங்கம்- சிறிகாந்தாவுக்கும் கூட பொருத்தமானது தான்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் குறிப்பாக இரா..சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராசா, சிவிகே.சிவஞானம் போன்றவர்கள்- “கூட்டமைப்பில் இருந்து நாங்களாக யாரையும் வெளியேற்றவில்லை அவர்களாகவே பிரிந்து போனார்கள், அவர்கள் திரும்பி வரலாம். வந்தால் இடமிருக்கும்” என்று ஒரு வாதத்தை முன்வைக்கிறார்கள். பிடிகொடுக்காமல் பேசுகிறார்கள்.
அது ஒருவகையில உண்மையான கருத்து தான். கூட்டமைப்பில் இருந்து எந்தக் கட்சியும் தலைவரும் வெளியேற்றப்படவில்லை. அவர்களாகவே விலகிப் போனார்கள்.
அவ்வாறானதொரு நிலை- அல்லது நெருக்கடி அவர்களுக்கு வெவ்வேறு சந்தர்ப்பங்களில், வெவ்வேறு சூழ்நிலைகளால் ஏற்படுத்தப்பட்டது. அல்லது ஏற்பட்டது.
அப்போது, உள்ளிருந்து போராடுவதை விட வெளியே போய் தனிக்கட்சி, கூட்டணி அமைக்கும் தெரிவுகளைத் தான் அவர்கள் கையில எடுத்திருந்தார்கள்.
அவ்வாறு வெளியேறியவர்களால், இதுவரையில் தனியாகவோ, கூட்டாக சாதிக்கவோ முடியவில்லை. தமக்கான மக்கள் ஆதரவை நிரூபிக்கவும் முடியவில்லை.
இனிவரும் தேர்தல்களில் அவர்கள் அதனை சாதிக்கலாம், நிரூபிக்கலாம். அதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஆனால், அவ்வாறான சாதனைகள் கட்சிகள், கூட்டணிகளுக்கு சாதகமாக அமையலாமே தவிர, தமிழ் மக்களுக்கு, அவ்வாறாக இருக்கப் போவதில்லை.
தமிழ்த் தேசிய கட்சிகள் சிதறிப் பிரிந்து போட்டியிடும் போது, அதன் பலாபலன்களை பேரினவாதக் கட்சிகள் தான் அனுபவிக்கும். அது இந்தப் பொதுத்தேர்தலில் நிச்சயமாக வெளிப்படும் சாத்தியங்கள் உள்ளன.
இவ்வாறான சூழலில் கூட, தலையணையை மாற்றினால் தலைவலி போய் விடும் என்று நம்புகின்ற நிலையில் தான் தமிழ்க் கட்சிகளின் தலைமைகள் இருக்கின்றன.
ஒட்டுமொத்த தமிழ் தேசிய அரசியல் பலம் பற்றியோ, அதனை யாரிடமும், எந்த இடத்திலும், விட்டுக்கொடுத்து விடக்கூடாது என்பது பற்றியோ சிந்திக்கக் கூடிய நிலையில், தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகள் இல்லாமல் இருப்பது தான் சாபக்கேடு.