FeaturesLocal

மதுஷின் சகா ‘பும்மா’வாலே கிருஷ்ணா சுட்டுக்கொலை!

மாக்கந்துர மதுஷின் சகா கெலுமாவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டதே ஒரு சி.டி… அந்த சி டியில் இருந்தே இப்போது விபரங்கள் பெறப்பட்டு மதுஷின் நெருக்கமான ஆட்கள் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர். அப்படி சிக்கியவர்களில் ஒருவர்தான் பெங்கிரிவத்தே சுத்தா.

இவர்தான் மாக்கந்துர மதுஷின் தந்தையார் மரணத்தின் இறுதிக்கிரியையின்போது முழு செலவையும் கவனித்தவர். ஹெலியில் இருந்து பூக்களைச் சொரிந்தது முதல் நேரடி ஒளிபரப்பை செய்து மதுஷுக்கு அதனைப் பார்வையிட வைத்தது – வாகனம் சாப்பாடு மற்றும் இதர அனைத்து செலவுகளையும் கவனித்தது இவர்தான்…

மதுஷின் தந்தையார் 62 வயதுடைய சமரசிங்க ஆராச்சிலாகே லக்ஷ்மன் எனப்படும் லால் கடந்த 2018ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதமா 20ஆம் திகதி விபத்துச் சம்பவமொன்றில் சிக்கி படுகாயமடைந்து களுத்துறை நாகொட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார். சரியாக ஒன்பது நாட்கள் கழித்து 29ஆம் திகதி அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .

இறக்கும்வரை இவர் யாரெனத் தெரியாமல் இருந்தாலும் மாக்கந்துர பகுதிக்கு இவரது உடல் எடுத்துவரப்பட்டதும் பொலிஸ் அலெர்ட் ஆகியது .அதன் பின்னரே மதுஷின் சகாக்கள் மற்றும் நட்புக்கள் அங்கு வர ஆரம்பித்தன. தந்தையாரின் பெயரில் ஊர் விகாரைக்கு மண்டபம் ஒன்றும் கட்டிக் கொடுக்கப்பட்டது. அந்த இறுதி ஊர்வலத்தின்போது மதுஷின் இரங்கல் அறிக்கையும் ஒருவரால் வாசிக்கப்பட்டது. அத்துடன் மதுஷ் அனுப்பிய இரங்கற்பா அங்கு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது .

”தந்தையே என் தம்பியைக் கொன்ற கயவர்களை விடமாட்டேன்… அவர்களைப் பின் தொடர்வேன்… உங்களின் இரத்தத்தில் கலந்துள்ள நான் அதனைச் செய்ய நீங்கள் எனக்கு மேலிருந்து வழிகாட்ட வேண்டும்” என்று சுட்டுக்கொல்லப்பட்ட தனது தம்பியாரின் நினைவை அந்த இரங்கற்பாவில் எழுதி இருந்தார் மதுஷ்.

ஆரம்ப காலத்தில் தந்தையுடன் மனஸ்தாபத்தில் இருந்தார் மதுஷ். சிறு வயதில் தனது தாயாரைத் தனியே தவிக்க விட்டுச் சென்ற கோபம் தந்தை மீது மதுஷுக்கு இருந்தாலும் இறுதிக்காலங்களில் அவர் தந்தை மீது அன்பு காட்டி வந்தார்.

இந்தநிலையில், தந்தையின் இறுதிக்கிரியையில் கலந்துகொள்ள வரவிருந்த மதுஷ் பாதுகாப்புப் படையினர் தன்னைக் கைதுசெய்யலாம் என்ற அச்சம் காரணமாக வருகையைத் தவிர்த்தார் எனச் சொல்லப்படுகின்றது. (மதுஷின் தந்தையாரின் பூதவுடலைத் தாங்கி அவரது சகாக்கள் செல்வது, ஹெலியில் பூக்கள் சொரிவது, மதுஷ் தந்தைக்கு அனுப்பிய இரங்கற்பா ஆகியவற்றின் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

மதுஷ் கைதுசெய்யப்பட்ட கையோடு இந்த சி.டி. எல்லாம் எரிக்கப்பட்டன. ஆனால், கெலுமா தனது நினைவுக்கு வைத்திருந்த இந்தச் சி.டி. சிக்கியதால் இப்போது பலர் மாட்டியுள்ளனர்.

இப்போது என்ன நடக்கின்றது?

டுபாயில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மதுஷை அவரது இரண்டாவது மனைவி – அதாவது கொல்லப்பட்ட களு துஷாரவின் மனைவி ஒவ்வொரு ஞாயிறு தோறும் சிறைக்குச் சென்று பார்வையிட்டு வருகின்றார். கிடைத்த தகவல்களின்படி தனது பெரும் சாம்ராஜ்யமே இல்லாமல்போன பெரும் அதிர்ச்சியில் மதுஷ் இருக்கின்றார் எனத் தெரியவருகின்றது.

சர்வதேச போதைப்பொருள் மாபியாவை பொறுத்தவரை அவர்கள் ஒரு தடவை பொலிஸிடம் சிக்கிய டீலர்களை மீண்டும் இணைத்துக்கொள்ள மாட்டார்கள் என்பது அதற்கான காரணம். அப்படி சிக்கியவர்கள் பொலிஸின் உளவாளிகளாக மாறிவிடலாம் அல்லது அவர்களுடன் சேர்ந்து புதிய திட்டத்தை அமைத்து தங்களை இல்லாமல் செய்யலாம் என்பனவே அதற்கான காரணங்களாகும்..

அதனால் அதிர்ச்சியில் உள்ள மதுஷ் தனது சகாக்கள் இலங்கையினுள் சிக்கியுள்ள காரணத்தினாலும் துயரத்தில் இருக்கின்றார் எனச் சொல்லப்படுகின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக பல இடங்களில் தனது பணத்தை முதலீட்டுள்ள மதுஷ் அதற்கு என்ன நடந்தது? அவையெல்லாம் திருப்பிக் கிடைக்குமா? என்பது குறித்தும் சிந்தித்து வருகின்றார் என அங்கிருந்து வரும் செய்திகள் சொல்கின்றன.

இதற்கிடையில் மதுஷின் சகா கெலுமாவின் வர்த்தக நடவடிக்கைகளில் தொடர்பில் இருந்த பெண் நூலகர் ஒருவரையும் பொலிஸார் தேடி வருகின்றனர். இந்தக் கைதுகளுக்குப் பின்னர் அந்த நூலகர் தலைமறைவாகியுள்ளார் எனச் சொல்லப்படுகின்றது.

இதற்கிடையில் மதுஷின் உதவியுடன் டுபாயில் தனது பணத்தை முதலிட்ட பிரபல அரசியல்வாதி ஒருவர் குறித்தும் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

அதேசமயம் கஞ்சிப்பான இம்ரானின் சகாக்கள் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் அல்லவா? அவர்களிடம் இருந்தும் பல முக்கிய தகவல்கள் கிடைத்தவண்ணம் இருக்கின்றன எனப் பொலிஸ் சொல்கின்றது.

யார் பும்மா?
ஜீ பும்பா?

கொழும்பு பாதாள உலகக் கோஷ்டியில் இரண்டு புள்ளிகள் இருக்கின்றனர். ஒருவர் பும்மா எனப்படும் கெனடி… புலிகள் இயக்கத்தில் இருந்த அவர் குறி பார்த்து சுடுவதில் விற்பன்னர். அவர் குறி தப்பியதே இல்லை. கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் நவோதயா மக்கள் முன்னணியின் தலைவருமான கிருஷ்ணாவை சுட்டுக்கொன்றவர் இவர் எனச் சொல்லப்படுகின்றது.

அந்தச் சம்பவத்துக்குப் பிறகு இவர் இந்தியாவுக்குத் தப்பியோடிவிட்டார் எனப் பொலிஸ்
சொல்கின்றது. மாக்கந்துர மதுஷின் நண்பரான இவர் சுடுவதை மட்டும் ஒரு தொழிலாகச் செய்து வந்திருக்கின்றார். போதைப்பொருள் விற்பனையில் அவர் ஈடுபட்டதில்லையாம். சரியாகச் சுட்டு கேமை முடிப்பது – அதற்குரிய பணத்தை வாங்குவது மட்டுமே அவர் வேலை.

மற்றவர் ஜீ பும்பா.., கஞ்சிப்பான இம்ரானின் சகா. கொச்சிக்கடை குடுசெல்வியின்
வலது கை. குடு சூட்டியை அண்மையில் சுட்டவர் இவர்தான்… அதேபோல் ஹேகித்தயில் அண்மையில் இரு இளைஞர்களை வானில் வழிமறித்துச் சுட்டுத்தள்ளியதிலும் பும்பாவுக்குப் பங்குண்டு. இவரையே சில தினங்களுக்கு முன்னர் கம்பளையில் வைத்து கைதுசெய்தது எஸ்.ரி.எவ்.

ஜீ பும்பாவைக் கைதுசெய்துள்ள பொலிஸ், பும்மாவுக்கும் வலை வீசியுள்ளது.

– சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading