உச்சநீதிமன்றில் சபரிமலை வழக்கு 22ஆம் திகதி விசாரணைக்கு வராது!
இந்திய உச்சநீதிமன்றத்தில் சபரிமலை வழக்கு எதிர்வரும் 22ஆம் திகதி விசாரணைக்கு வர வாய்ப்பு இல்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களையும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு கூறியது.
இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தேசிய ஐயப்பன் பக்தர்கள் சங்கத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் இந்து மல்கோத்ரா, எல்.நாகேஸ்வரராவ், எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு எதிர்வரும் 22ஆம் திகதி விசாரணைக்கு வருவதாக இருந்தது.
இந்தநிலையில், மனுதாரரின் சார்பில் வக்கீல் மேத்யூஸ் ஜே.நெடும்பரா நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு ஆஜராகி, ஐயப்பன் பக்தர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் மறு ஆய்வு மனு மீதான விசாரணையை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அதற்கு நீதிபதிகள், அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதிகளில் ஒருவரான இந்து மல்கோத்ரா மருத்துவ விடுப்பில் இருப்பதால், மறு ஆய்வு மனு மீது எதிர்வரும் 22ஆம் திகதி விசாரணை நடைபெற வாய்ப்பு இல்லை என்று கூறினார்கள்.