Local

அளவுக்கதிக தன்னம்பிக்கை கொண்டிருந்தார் பிரபாகரன்! – கூறுகின்றார் யசூசி அகாசி

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கை கொண்டிருந்தார் என ஜப்பானிய அரசின் முன்னாள் விசேட பிரதிநிதி யசூசி அகாசி தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“விடுதலைப்புலிகளின் தலைவரைச் சந்திப்பதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 2003ஆம் ஆண்டு கிளிநொச்சியில் நான் பிரபாகரனை சந்தித்தேன். அது நீண்ட சந்திப்பு. சமாதானத்துக்கான வாய்ப்புகள் மற்றும் விடுதலைப்புலிகளுக்கும் அரசுக்கும் இடையிலான சமாதானம் குறித்து நீண்ட நேரம் பேச்சுக்களில் ஈடுபட்டோம்.

நான் அப்போது காணப்பட்ட வாய்ப்பைப் பயன்படுத்துமாறு பிரபாகரனைக் கடுமையாக வலியுறுத்தினேன். எனினும், பிரபாகரன் சமாதானப் பேச்சுக்களை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என்பதை பின்னர் நான் உணர்ந்தேன்.

எங்கள் சந்திப்புக்கு பின்னர் நாங்கள் ஒன்றாக மதிய உணவருந்தினோம். அப்போது பிரபாகரன் சற்று இயல்பான நிலையில் காணப்பட்டார். காலையில் இடம்பெற்ற பேச்சுக்கள் தீவிரமானவையாகவும் உத்தியோகபூர்வமானவையாகவும் இருந்தன. மதிய உணவுக்குப் பின்னர் நாங்கள் உத்தியோகபூர்வமற்ற பேச்சுக்களில் ஈடுபட்டோம். பிரபாகரன் தனது மகன், தனது குடும்பம், தனது எதிர்பார்ப்புகள் குறித்து குறிப்பிட்டார்.

பிரபாகரன் தனக்கு வழங்கப்பட்ட பல சந்தர்ப்பங்களைத் தவறவிட்டார் என்பது குறித்து நான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன். விடுதலைப்புலிகள் யுத்தநிறுத்தத்துக்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

அவர்கள் அதற்காக என்னைத் தொடர்பு கொண்டனர். தான் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவைச் சேர்ந்தவர் எனத் தெரிவித்து என்னை நபர் ஒருவர் தொடர்பு கொண்டார்.

நான் வெறுமனே யுத்த நிறுத்தம் மாத்திரம் போதுமானதல்ல ஆயுதங்களைக் கைவிடவேண்டும், பொதுமக்களை விடுவிக்கவேண்டும் என அவரிடம் தெரிவித்தேன். அவர் எனது நிலைப்பாட்டைப் பிரபாகரனிடம் தெரிவித்த பின்னர் என்னைத் தொடர்பு கொள்வதாகத் தெரிவித்தார். ஆனால், பின்னர் என்னை அவர் தொடர்பு கொள்ளவில்லை.

அன்ரன் பாலசிங்கம், தமிழ்ச்செல்வன் மற்றும் சர்வதேச மோதல்கள் குறித்த அனுபவமிக்கவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப விடுதலைப்புலிகள் பேச்சுக்களுக்கான வாய்ப்புள்ளதா என ஆராய்ந்தனர். எனினும், பிரபாகரனின் மனது யுத்தவெற்றிகளால் நிரம்பியிருந்தது. அவர் அளவுக்கதிகமான தன்னம்பிக்கை கொண்டிருந்தார் என நான் நினைக்கின்றேன்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading