YouTube பார்த்து கர்ப்பத்தை கலைக்க முயன்ற மாணவி மரணம்!

நெல்லூர் மாவட்டம், மரிபாடு மண்டலத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண். இவர் நெல்லூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக்., 2-ம் ஆண்டு படித்து வந்தார். மாணவி 6 மாத கர்ப்பமாக இருந்தார். இது யாருக்கும் தெரியாது. அவர் வழக்கம் போல் கல்லூரிக்கு வந்தார்.

வகுப்பு இடைவேளையின் போது கல்லூரி மாணவிகள் அனைவரும் விளையாட்டு மைதானத்திற்கு சென்றனர்.

அந்த மாணவி மட்டும் வகுப்பறையில் தனியாக இருந்தார். அப்போது கதவை மூடி உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டார்.

நீண்ட நேரமாகியும் மாணவி விளையாட வராததால், அவரது நண்பர்கள் மாணவியை அழைத்துவர வகுப்பறைக்கு வந்தனர். வகுப்பறை கதவு மூடிக்கிடந்தது. அவர்கள் கதவை தட்டினர் கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்து கதவை உடைத்து பார்த்தனர். அங்கு பலத்த ரத்தப்போக்குடன் மாணவி மயங்கிக் கிடந்தார். மாணவியின் பக்கத்தில் 6 மாத சிசு ஒன்று கிடந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவிகள் அந்த மாணவியையும் கருவையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவரும், சிசுவும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விவரங்களை சேகரித்தனர். சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில் மாணவி வகுப்பறையில் யூடியூப் வீடியோ பார்த்தபடி கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது.

அப்போது ரத்தபோக்கு ஏற்பட்டு அவர் இறந்திருக்கலாம் என்று போலீசார் கூறினார்.

அந்த இளம்பெண்ணின் செல்போனை ஆய்வு செய்த போது அவர் கார் டிரைவர் ஒருவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. அவர் மூலம் மாணவி கர்ப்பமாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதையடுத்து போலீசார் கார் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவி யூடியூப் பார்த்து வகுப்பறையில் கருக்கலைப்பு செய்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *