கிரிக்கெட் போட்டியில் “No Ball” சொன்ன Umpire வை அடித்து கொலை செய்த இளைஞர்கள்!
கிரிக்கெட் விளையாட்டின் போது ‘நோ பால்’ கொடுத்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் நடுவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒடிசா மாநிலத்தில்அரங்கேறியுள்ளது.
விளையாட்டு வினையானது என்ற பழமொழிக்கு ஏற்ப ஒடிசா மாநிலத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
அங்கு உள்ளூர் நபர்கள் ஒன்று சேர்ந்து கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்தியுள்ளனர்.
ஜாலியாக ஆரம்பித்த விளையாட்டு போட்டியில் லக்கி ரவுத் என்ற 22 வயது இளைஞர் அம்பயராக இருந்துள்ளார்.
விறுவிறுப்பாக நடந்த போட்டியில் பந்துவீச்சாளர் ‘நோ பால்’ வீசியதாக நடுவர் லக்கி சைகை காட்டினார். ஆனால் அது நோ பால் இல்லை என பந்துவீச்சாளரும் பீல்டிங்கில் இருந்தவர்களும் வாக்குவாதம் செய்யத் தொடங்கினர்.
ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். பீல்டிங் அணியில் இருந்தவர்கள் பேட்டை எடுத்து தாக்க தொடங்கினர்.
அப்போது ஸ்முதிரஞ்சன் ரவுத் என்ற நபர் அம்பயராக இருந்த லக்கியை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
இதை பார்த்த அங்கிருந்த மற்றவர்கள் லக்கியை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி லக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளியை உள்ளூர் மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிரிக்கெட் விளையாட்டில் நோ பால் கொடுத்ததற்காக இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.