இலங்கை காட்டுக்குள் 4 ஆண்டுகள் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு!

 

இலங்கையில் நான்கு ஆண்டுகளாக காட்டு பகுதிக்குள் குளிக்காமல் வாழ்ந்து வந்த நபர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காட்டுப்பகுதியில் வாழ்ந்த நபர்
இலங்கையில் காட்டுப் பகுதிக்குள் நான்கு வருடங்களாக குளிக்காமல் தனிமையில் வாழ்ந்து வந்த நபர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

குடும்பத்தினரால் கைவிடப்பட்டு மனநலம் குன்றிய நிலையோடு, மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிராந்தியத்திற்கு உட்பட்ட தாந்தாமலை காட்டுப் பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக இவர் வாழ்ந்து வந்துள்ளார்.

தொடக்க காலத்தில் அந்த காட்டுப் பகுதி வழியாக செல்வோர் இவரை பாலா என்ற பெயரில் அழைத்துள்ளனர். சிறிது காலத்திற்கு மனிதர்களுடன் பழகி வந்த பாலா, நாட்கள் செல்ல செல்ல மனிதரை கண்டால் ஓடி ஒளிந்து கொள்ள தொடங்கியுள்ளார்.

அத்துடன் நான்கு வருட காலமாக குளிக்காமல், முடிவெட்டாமல், அதிக தூக்கம் இல்லாமலும் வாழ்ந்து வந்துள்ளார்.

பத்திரமாக மீட்பு

இலங்கையின் முன்னாள் தமிழ் போராளியான பாலா தொடர்பில் தகவலறிந்து காட்டுப் பகுதிக்குள் சென்ற ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள் அவருடன் நீண்ட முயற்சி மற்றும் உரையாட நடத்தி பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் இது தொடர்பாக ஜனநாயக போராளிகள் கட்சியின் உபத் தலைவர் என்.நகுலேஸ் வழங்கிய தகவலில், பாலா தனது கட்சி பணியாளர் ஒருவரின் கண்காணிப்பில் இருப்பதாகவும், ஏறாவூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாலாவின் உடல் நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாக மருத்துவர்கள் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாலா தொடர்பான தவறான காணொளிகளை வெளியிட்டு, சர்வதேச சமூகத்திடம் இருந்து பணம் பெறும் முயற்சிகளும் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *