காணாமல் போயிருந்த பேருவளை முஸ்லிம் யுவதி சடலமாக மீட்பு!!
கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி நள்ளிரவில் வீட்டிலிருந்து வெளியேறி காணாமல் போயிருந்த பேருவளை மொல்லியமலை பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் யுவதி (25) இன்று அதிகாலை பேருவளை ஆழ்கடலில் ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி கடந்த முதலாம் திகதி நள்ளிரவில் இருந்து காணாமல் போயிருந்தார். குறித்த யுவதியை தேடும் பணியில் பேருவளை பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் கடந்த மூன்று தினங்களாக ஈடுபட்டிருந்தனர்.
இவ்வாறான நிலையில் நேற்று பிற்பகல் பேருவளை ஆழ்கடலில் பெண் உடல் ஒன்று மிதப்பதாக மீனவர்கள் தெரிவித்ததையடுத்து பேருவளை மருதானை மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் ஆழ் கடலுக்குச் சென்று பல மணித்தியாலங்கள் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். என்றாலும் நேற்று உடல் எதுவும் கண்டெடுக்கப் படவில்லை.
இவ்வாறான நிலையில் இன்று அதிகாலை பேருவளை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் ஆழ்கடலில் பெண் ஒருவரின் உடல் ஒன்று மிதப்பதாக மீண்டும் மீனவர்கள் அறிவித்ததை அடுத்து பேருவளை மருதானை மீன்பிடி துறைமுகத்திலிருந்து சில மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்று குறித்த ஜனாஸாவை கரை சேர்த்துள்ளனர்.
காணாமல் போயிருந்த யுவதியின் தந்தை இந்த உடல் தனது மகளுடையது என்று ஸ்தலத்திற்கு சென்று உறுதிப்படுத்தினார்.
அதன் பின்னர் மரண விசாரணைகளை மரண விசாரணை அதிகாரி பர்ஸான் அவர்கள் முன்னெடுத்ததுடன் பிரேத பரிசோதனைக்காக களுத்துறை வைத்தியசாலைக்கு சடலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
குறித்த யுவதிக்கு கடந்த பல வருடங்களாக அவ்வப்போது மனநலம் பாதிக்கப்படுவதாகவும், அதற்காக பல ஆண்டுகளாக உளவள சிகிச்சைகளை மேற்கொண்டு வருவதாகவும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.