நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி!

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. நியூசிலாந்துக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் முதல் 5 வீரர்களான டேவான் கான்வே, பின் ஆலென், நிக்கோல்ஸ், டேரில் மிட்செல், லதாம் ஆகியோர் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இதனால் அந்த அணி 15 ஓட்டங்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் அந்த அணி 100 ஓட்டங்களையாவது தொடுமா என நினைத்து கொண்டிருந்த வேலையில் பிலிப்ஸ் 36 ஓட்டங்களையும் பிரேஸ்வெல் 22 ஓட்டம், சாண்ட்னெர் 27 ஓட்டம் ஆகியோர் அடித்த ஓட்டங்களின் உதவியுடன் 100 ஓட்டங்களை தொட்டது. இறுதியில் அந்த அணி 34.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ஓட்டங்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது. இதையடுத்து 109 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் புகுந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித், கில் ஆகியோர் களம் இறங்கினர். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த நிலையில் ரோகித் 51 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். இதையடுத்து விராட் கோலி களம் இறங்கினார். அவர் 11 ஓட்டம் எடுத்திருந்த நிலையில் சாண்ட்னெர் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இறுதியில் இந்திய அணி 20.1 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 111 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இவ்விரு அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 24ம் திகதி இந்தூரில் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *