காதலியை ஏன் கொலை செய்தேன்? காதலன் பரபரப்பு வாக்குமூலம்!

குருந்துவத்தை குதிரைப் பந்தய மைதானத்திற்கு பின்புறம் உள்ள உதைபந்தாட்ட கட்டிடத்திற்கு அருகில் நேற்று படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவியின் கொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 30ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டுள்ளது.

இணைப்புச் செய்தி;

குருந்துவத்தை குதிரைப் பந்தய மைதானத்திற்கு பின்புறம் உள்ள உதைபந்தாட்ட கட்டிடத்திற்கு அருகில் நேற்று (17) படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவி காதலனால் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கொலையாளி தன்னை விட்டு பிரிந்து வேறு ஒருவருடன் உறவை ஏற்படுத்திவிடுவாளோ என்ற பகுத்தறிவற்ற பயமே இந்த கொலைக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாணவியைக் கொன்ற பின்னர், சந்தேக நபர் முதலில் பல்கலைக்கழகத்திற்குச் சென்றுள்ளார்.

ஹோமாகம கிரிவத்துடுவ புபுது தோட்டத்தில் வசித்து வந்த கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் மூன்றாம் வருட மாணவியான சதுரி ஹன்சிகா மல்லிகாராச்சி என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நுகேகொட பெண்கள் உயர்தரப் பாடசாலையில் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வில் சித்தியடைந்த இந்த மாணவி கல்வி தொடர்பான தனது சொந்த யூடியூப் சேனல் ஒன்றினை நடத்தி வந்துள்ளார். குறித்த மாணவி குடும்பத்தின் மூத்த பிள்ளை என்பதோடு தந்தையும் அம்மாவும் இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவரான வெல்லம்பிட்டிய, ஃபோர்ட்டிலா உஸ்வத்த வீதி, 245/A 3 இல் வசிக்கும் விக்ரமகே பசிந்து சதுரங்க டி சில்வா என்பவரே கொலையாளி.

கைது செய்யப்பட்ட கொலையாளி, வெல்லம்பிட்டிய, கொலன்னாவ, கொட்டிகாவத்தை, கிரிபத்கொட ஆகிய இடங்களில் தரம் 9-10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பயிற்சி வகுப்புகளை நடாத்தி தனது பொருளாதாரத்தை நிர்வகிக்கும் நபர் என பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வேறு உறவுக்காக தன்னை விட்டு பிரிந்து செல்ல முயன்றதால் தான் மாணவியை கொன்றதாக பொலிஸ் விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

எனக்கு அவள் வேண்டும் அவள் இல்லாமல் என்னால் இருக்க முடியாது. நான் அவளை முழு மனதுடன் உண்மையாக நேசித்தேன். அவள் வேறொருவரிடம் செல்ல முயன்றாள். நான் சொன்னதை அவள் கேட்கவில்லை. அதனால் எனக்கு வேறு எதுவும் செய்ய முடியவில்லை என விசாரணையில் தெரிவித்துள்ளான்.

மேலும் அந்த மாணவிக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து, வேறு ஒரு இளைஞனுடன் உறவை வளர்த்துக் கொள்வார் என பலத்த சந்தேகம் கொண்டு வேறு ஆணுடன் பேச அனுமதிக்காமல் இருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் மாணவியை கொலை செய்ய பயன்படுத்திய கத்தியை சில நாட்களுக்கு முன்னர் கொள்வனவு செய்துள்ளதாகவும், இந்த கொலை முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கத்தியை பையில் வைத்துக்கொண்டு நேற்று மதியம் 12.30 மணியளவில் அவருடன் ரேஸ்கோர்ஸ் அருகே வந்தார்.

மாணவியிடம் அரட்டை அடித்து எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கூறிய போது, ​​இனிமேல் இப்படி பழக முடியாது என மாணவி கூற, கோபமடைந்த இளைஞன், தான் கொலை செய்ததாக விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

காதலியை கொன்ற இளைஞன் கைகளில் இருந்த இரத்தத்தை பையில் துடைத்துவிட்டு கத்தியை பையில் வைத்துக்கொண்டு பல்கலைக்கழகத்தை நோக்கி ஓடியுள்ளான். அவர் அப்படி ஓடுவது பல பாதுகாப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது.

பல்கலைக்கழகத்திற்குச் சென்றுவிட்டு வெல்லம்பிட்டியில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பிய அவர் தனது கைத்தொலைபேசியையும் அடையாள அட்டையையும் வீட்டில் வைத்துவிட்டுச் சென்றுள்ளார். அவர் களனி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள புறப்பட்டாரா என்ற சந்தேகம் பொலிஸ் புலனாய்வாளர்களுக்கு ஆரம்பத்தில் இருந்தது.

ஆனால் அவர் வீடு திரும்பியதும் பொலிஸ் குழு சென்று அவரை கைது செய்தது.

மாணவியை கொல்ல பயன்படுத்திய இரத்தக்கறை படிந்த கத்தி அவரது பையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

குருந்துவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *