வரலாறு காணாத உணவு நெருக்கடியில் பாகிஸ்தான் மக்கள்!

பாகிஸ்தானில் வரலாறு காணாத உணவுப் பஞ்சம் நிலவி வருவதை ஒட்டி, அந்நாட்டில் உள்ள மக்களின் நிலைமை பரிதாபகரமாக மாறி வருகிறது.

உணவுப் பொருட்களுக்காகவும், சப்பாத்தி துண்டுகளுக்காகவும் மனிதர்கள் பயங்கரமாக மோதிக்கொள்ளும் கோரக்காட்சிகள் பாகிஸ்தானில் அரங்கேறி வருகின்றன.அந்த வகையில், பாகிஸ்தானில் கோதுமை மூட்டைகளை கொண்டு செல்லும் லாரி ஒன்றை நூற்றுக்கணக்கானோர் துரத்தி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பயங்கர மழையும், அதைத்தொடர்ந்து கட்டுங்கடங்காத வெள்ளமும் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் கோடிக்கணக்கிலான ஏக்கர் பயிர்கள் நாசம் அடைந்தன. பயிர்சாகுபடி சுமார் 80 சதவீதம் வரை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களுக்கு அந்நாட்டில் பற்றாக் குறை ஏற்பட்டது. வெளிநாடுகளில் இருந்து உணவு தானியங்களை இறக்குமதி செய்து பற்றாக்குறையை பாகிஸ்தான் அரசு ஈடு செய்து வந்தது.

சமையல் காஸ் சிலிண்டர்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு உருவாகியுள்ளது. இதனால் உணவுப் பொருட்களுக்காகவும், மண்ணெண்ணைக்காகவும் மக்கள் வீதிகளில் சண்டையிட்டுக் கொள்வதை பார்க்க முடிகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கோதுமை வாங்க ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பாகிஸ்தானில் ஒரு நகரில் கோதுமை மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரியை நூற்றுக்கணக்கான மக்கள் மோட்டார் சைக்கிள்களில் விரட்டிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மக்கள் கூட்டம் துரத்துவதால் என்ன செய்வதென அறியாத ஊழியர்கள், மக்களிடம் இருக்கும் சொற்ப பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு கோதுமை மூட்டைகளை கொடுப்பதை பார்க்க முடிகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *