விந்தணுக்களை இலவசமாக பதப்படுத்த அனுமதி!
உக்ரைன் போரில் களமிறங்குவதற்காக அணி திரட்டப்பட்ட ஆண் ரஷ்ய வீரர்கள், அவர்களது விந்தணுக்களை இலவசமாக உறைய வைக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைனுக்கு எதிரான போர் நடவடிக்கைகளில் கிட்டத்தட்ட 1 லட்சம் ரஷ்ய வீரர்கள் வரை கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளிவந்து உள்ள நிலையில், போரின் ஆரம்ப கட்டத்தில் ரஷ்ய படைகள் கைப்பற்றி வைத்து இருந்த பகுதிகளை கூட தற்போது உக்ரைனிய படைகள் மீட்டெடுக்க தொடங்கியுள்ளனர்.
இதற்கு ரஷ்ய வீரர்களின் இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் அவர்களின் போர் சோர்வு காரணமாக சொல்லப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் உக்ரைனில் தாக்குதலை தீவிரப்படுத்த கடந்த சில நாட்களுக்கு முன்பு 3,00,000 வீரர்களின் ஆள்சேர்ப்பு அறிவிப்பை ரஷ்ய ஜனாதிபதி புடின் அறிவித்து இருந்தார்.அதனடிப்படையில் சிறிய அல்லது எந்த பயிற்சியும் இல்லாத ஆண்களை வலுக் கட்டாயமாக ராணுவத்தில் சேர்க்கும் முயற்சியில் ரஷ்ய அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இதனால் புடினுக்கு எதிராகவும், ஆட்சேர்ப்பு அதிகாரிகளுக்கு எதிராகவும் ரஷ்ய பொதுமக்கள் கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர்.போர் அனுபவம் சிறிதும் இல்லாமல் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ள இந்த வீரர்கள் போரில் உயிர் இழப்பதற்கு அதிகமான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ரஷ்ய ராணுவத்திற்காக அணி திரட்டப்பட்ட ஆண்கள் தங்கள் விந்தணுக்களை இலவசமாக பதப்படுத்தி வைக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று ரஷ்ய அரசின் செய்தி நிறுவனமான TASS தெரிவித்துள்ளது.அத்துடன் அவர்களது குடும்பங்களுக்கு கருவுறாமை சிகிச்சைக்கு ஒதுக்கீடுகளும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.