இலங்கையை நோக்கி படையெடுக்கும் ஐரோப்பிய மக்கள்!

ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலம் நிலவும் நிலையில் இலங்கையை நோக்கி சுற்றுலா பயணிகள் பயணிக்க ஆரம்பித்துள்ளனர்.

டிசம்பர் முதல் 20 நாட்களில் 50,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு பயணித்துள்ளனர். டிசம்பர் மாதத்தில் வந்த சுற்றுலாப் பயணிகளில் 49 வீதமானவர்கள் ஜெர்மனி? ரஷ்யா, இந்தியா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

டிசம்பர் மாதத்தில் மொத்தம் 50,375 சுற்றுலாப் பயணிகள் ஏற்கனவே இலங்கைக்கு வந்துள்ளனர். இந்த மாதம் ரஷ்யா, இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, ஜேர்மனி, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், மாலைதீவு மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருந்து 1000க்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது

அதிகாரசபை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்த ஆண்டு இலங்கை 678,392 சுற்றுலாப் பயணிகளை வரவேற்றுள்ளது. இந்தியா, இங்கிலாந்து, ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.

இதேவேளை, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அதிகளவான சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளது. மார்ச் மாதத்தில் 106,500 சுற்றுலாப் பயணிகள் வந்தனர், பின்னர் பொருளாதார நெருக்கடி, எதிர்ப்புகள் மற்றும் பாரம்பரிய பயணிகளுக்கு விடுமுறை காலம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்தது.

கடந்த சில மாதங்களாக ஐரோப்பாவில் நிலவும் குளிர்காலம் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேற்கத்திய நாடுகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான வருகையை சுற்றுலா அமைச்சு எதிர்பார்க்கிறது.

2021 டிசம்பரில் 89,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை இலங்கை வரவேற்றது. குளிர்கால மாதங்களில் சுற்றுலாப் பயணிகளை குறிப்பாக ஐரோப்பாவிலிருந்து வரும் பயணிகளை ஈர்க்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள், கொவிட் -19 தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக மூன்று கடினமான ஆண்டுகளைத் தொடர்ந்து சுற்றுலாத் துறை படிப்படியாக முன்னேறி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *