கணவனை கொலை செய்து விட்டு அருகிலேயே உறங்கிய மனைவி!

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் மதுபோதையில் வாக்குவாதம் செய்த கணவரை கொலை செய்த மனைவி, அவரது அருகிலேயே படுத்து உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுபோதைக்கு அடிமையான கணவன்

உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி நகரில் வசித்து வந்தவர் அதுல். இவர் மனைவி அன்னு மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். மதுபோதைக்கு அடிமையான அதுல், தினமும் மது அருந்திவிட்டு வந்த மனைவியுடன் சண்டையிடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

இதனால் கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அதுல் மதுபோதையில் மனைவியுடன் வாக்குவாதம் செய்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த அன்னு கல்லைக் கொண்டு கணவர் அதுலை பலமாக தாக்கியுள்ளார். அவர் மயங்கி விழுந்ததும் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். அதன் பின்னர் கணவர் உடலின் அருகிலேயே அன்னு படுத்து உறங்கினார்.

மறுநாள் குழந்தைகளிடம் தந்தையை எழுப்ப வேண்டாம் என்று கூறிவிட்டு, வேலைக்கு புறப்பட்டு சென்றார். மாலையில் வீடு திரும்பியதும் இரவு உணவை தயாரித்த அன்னு, குழந்தைகள் தூங்கியதும் அதுலின் உடலை இழுத்து சென்று வீட்டு வாசலில் போட்டுவிட்டு திரும்பியுள்ளார்.

அடுத்த நாள் காலையில் கத்தி கூச்சலிட்டு, தனது கணவர் குடிபோதையில் கீழே விழுந்து உயிரிழந்துவிட்டார் என்று கூறியுள்ளார்.

விசாரணையில் சிக்கிய அன்னு

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், அதுலின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அன்னுவின் வாக்குமூலம் முன்னுக்குப்பின் முரணாக இருந்ததால் பொலிஸார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *