தேர்தல் செலவு 1000 கோடி ரூபா!
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு-அதன் செலவுக்கு ஆயிரம் கோடி ரூபாவை அரசிடம் கேட்கிறது தேர்தல்கள் ஆணைக்குழு.
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இந்தப் பெரும் தொகையை வழங்கினால் அது மக்களுக்கு மேலும் சுமையாக அமையும் என்று அரச தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
தேர்தலை ஒத்திப்போடுவதற்கு பல காரணங்களை முன்வைக்கும் அரசு இதையும் இன்னொரு காரணமாக எடுத்துக்கொள்ளும் என்று நம்பப்படுகிறது.
…………………………………………………………..
ஆறு மாதங்களின் பின்தான் தேர்தல்:
ஐந்து கூட்டணிகள் களத்தில்…
……………………………………………………………
அடுத்த வருடம் மார்ச் மாதம் நடத்தப்பட வேண்டிய உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இப்போது கோரப்பட்டாலும்கூட தேர்தல் ஆறு மாதங்களுக்கு பின்பே நடத்தப்படும் என்று அரச தரப்பு வட்டாரம் தெரிவிக்கிறது.
8ஆயிரமாக இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 4 ஆயிரமாக அல்லது 5 ஆயிரமாகக் குறைக்கும் நோக்கில் எல்லை நிர்ணய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழுவின் அறிக்கை கிடைப்பதற்கு சில மாதங்கள் எடுக்கும் என்பதால் 6 மாதங்களுக்கு தேர்தலை ஒத்திப்போடுவதற்கு அரச தரப்பு தீர்மானித்துள்ளது என்று அறிய முடிகிறது.
இதவேளை,இந்தத் தேர்தலை ஓரிரு மாதங்களுக்கு ஒத்திப்போடுமாறு மொட்டு கட்சி உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இத்தேர்தலில் பிரதானமாக 5 கூட்டணிகள் களமிறங்குவதற்குத் தீர்மானித்துள்ளன.மொட்டு-ஐக்கிய தேசிய கட்சி-ஐக்கிய மக்கள் சக்தி-சிறிலங்கா சுதந்திர கட்சி-ஜேவிபி ஆகிய கட்சிகளின் தலைமையிலேயே இந்தக் கூட்டணிகள் உருவாகவுள்ளன.
சிலவேளை,இந்தக் கூட்டணிகள் மூன்றாக மாறுவதற்கும் வாய்ப்புண்டு என்று கூறப்படுகிறது.அதாவது மொட்டு-ஐக்கிய தேசிய கட்சி கூட்டணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி-சுதந்திர கட்சி கூட்டணி ஆகியவை உருவாவதற்கு வாய்ப்புண்டு.அவ்வாறு உருவானால் கூட்டணிகள் மூன்றாக மாறும்.