கோல்டன் பூட் யாருக்கு?
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடிக்கும் வீரருக்கு கோல்டன் பூட் விருது வழங்கப்படும். இம்முறை இந்த விருதுக்கான வேட்டையில் லயோனல் மெஸ்ஸி, கிளியான் பாப்பே ஆகியோர் தலா 5 கோல்களுடன் முன்னிலையில் உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக அர்ஜெண்டினாவின் ஸ்டிரைக்கர் ஜூலியன் அல்வரெஸூம், பிரான்ஸ் அணியின் சென்டர் முன்கள வீரர் ஆலிவர் ஜிரவுடும் உள்ளனர். இவர்கள் இருவரும் தலா 4 கோல்கள் அடித்துள்ளனர்.
கோல்டன் பூட்டில் சிக்கல் வந்தால்…: கோல்டன் பூட் விருதுக்கான பட்டியலில் இரண்டு அல்லது அதற்குமேற்பட்ட வீரர்கள் ஒரே எண்ணிக்கையிலான கோல்களை அடித்து சமநிலையில் இருந்தால் போட்டி விதிமுறைகளின்படி முதலில் அவர்கள் விளையாடிய ஆட்டங்களின் எண்ணிக்கை கருத்தில் கொள்ளப்படும். இதுவும் சமநிலையில் இருந்தால் அவர்கள் கோல் அடிக்க உதவியது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இந்த வகையில் மெஸ்ஸி இதுவரை 3 கோல்கள் அடிக்க உதவியுள்ளார். கிளியான் பாப்பே இரு கோல்கள் அடிக்க உதவியுள்ளார்.
8 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மனிக்கு எதிரான இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா தோல்வியடைந்த நிலையில் ஆறுதல் அளிக்கும் விஷயமாக தொடரின் சிறந்த வீரருக்கான கோல்டன் பால் விருதுடன் மட்டும் திரும்பினார் லயோனல் மெஸ்ஸி. தற்போது கத்தாரில் 18 காரட் தங்கத்தால் செய்யப்பட்ட சாம்பியன் கோப்பையுடன் தாயகம் திரும்புவதில் முனைப்புடன் உள்ளார்.