டுபாய் நாட்டிற்கு தப்பிச் சென்ற நபர் கைது!
கொள்ளுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தை ஏற்படுத்திவிட்டு டுபாய்க்கு தப்பிச் சென்ற சந்தேகநபர் இன்று (13) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
துபாயில் இருந்து நாடு திரும்பிய பின்னரே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 10ம் திகதி காலை 06.30 மணியளவில் பம்பலப்பிட்டியிலிருந்து காலிமுகத்திடல் நோக்கிச் சென்ற சந்தேகநபர் கார் முன்னால் சென்ற முச்சக்கரவண்டியின் பின்பகுதியில் மோதியதில் சாரதி உயிரிழந்தார்.
காரை ஓட்டி வந்த வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த மொஹமட் ரசூல் மொஹமட் ரிஷாக், விபத்து இடம்பெற்ற பின்னர், அன்றைய தினம் காலை 09:55 மணியளவில் நாட்டை விட்டு டுபாய்க்கு சென்றுள்ளதாக பின்னர் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கைதுசெய்வதற்கு சர்வதேச காவல்துறையினரின் உதவியை பெற இலங்கை காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தற்போது கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.