வெளிநாட்டு பயணங்களுக்காக பெரும் தொகை பணம் செலவு செய்த கோட்டா, மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் 2021 ஆம் ஆண்டில் உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயங்களுக்காக 40  மில்லியன் ரூபாவிற்கு மேல் செலவிட்டமை தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் வழங்கிய விபரங்களின் அடிப்படையில் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் வழங்கிய விவரங்கள், ராஜபக்ச சகோதரர்கள் இருவரும் கடந்த ஆண்டு ஐந்து உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களுக்காக மொத்தம் 44, 739,184.91  ரூபா செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2022 ஜனவரி முதலாம் திகதி ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்துக்கு உரிய விவரங்கள் கேட்டு விடுத்த கோரிக்கை முதலில் நிராகரிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், இது தொடர்பான மேல்முறையீட்டை பரிசீலித்த இலங்கை தகவல் உரிமை ஆணைக்குழு, கோரப்பட்ட விவரங்களை ஊடகவியலாளர்களிடம் வழங்குமாறு அலுவலகங்களுக்கு உத்தரவிட்டது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அலுவலகங்கள் 14 வேலை நாட்கள் அல்லது 21 நாட்களுக்குள் விவரங்களை அளிக்க வேண்டும் என்றாலும், பத்து மாதங்களுக்கும் மேலாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

கிடைத்த விவரங்களின்படி, 44 மில்லியனில் 36 மில்லியன் (ரூ.36, 970,864.14) ரூபா  முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரண்டு வெளிநாட்டு விஜயங்களுக்காக செலவிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மூன்று உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயங்களுக்கு 7 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமரின் உத்தியோகபூர்வ விஜயங்களுக்கான செலவு மொத்த செலவில் 83 சதவீதமாகும் .

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியூயோர்க் (அமெரிக்கா), கிளாஸ்கோ (இங்கிலாந்து) மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கான தனது விஜயங்களுக்காக 7,768, 320.77  ரூபா  செலவிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த விஜயங்களின் நோக்கம் ஜனாதிபதி செயலகத்தால் விளக்கப்படவில்லை.

நியூயார்க் விஜயத்திற்காக 5,461,221.71. ரூபாவும், கிளாஸ்கோ விஜயத்திற்காக 1,785, 210.42 ரூபாவும், ஐக்கிய அரபு இராஜியத்திற்கான விஜயத்திற்காக 521,888.68 ரூபாவும் செலவிடப்பட்டது.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, பங்களாதேஷ் சுதந்திர தின கொண்டாட்டங்கள் மற்றும் ஷேக் முகர்ஜி ரகுமானின் பிறந்தநாளில் கலந்துகொள்வதற்காக மார்ச் 19, 2021 அன்று பங்களாதேஷுக்கு விஜயம் செய்தார்.

இந்த வியஜத்திற்காக 10 மில்லியனுக்கும் அதிகமாக (10,568,962.53) செலவிட்டுள்ளார். 

செப்டம்பர் 10, 2021 அன்று G20 சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் இத்தாலிக்கு விஜயம் செய்தார். இத்தாலியில் நடந்த மாநாட்டில் அவரது குடும்ப உறுப்பினர்களில் சிலரும் கலந்துகொண்டனர்.

இந்த விஜயத்திற்கான செலவு ரூ.26,401,901.61 ரூபா ஆகும்.

முன்னாள் பிரதமர் மற்றும் அவரது பிரதிநிதிகள் இத்தாலியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் உணவு உண்பது போன்ற புகைப்படத்தை ஊடக இணையதளம் ஒன்று அந்த நேரத்தில் வெளியிட்டிருந்தது.

இது அப்போது அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் ஒப்பிடும் போது, ​​பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவினம் மிக அதிகமாக இருந்ததாகவும், முன்னாள் பிரதமருடன் வெளிநாடுகளுக்குச் சென்ற பெருமளவான நெருக்கமானவர்களே இதற்குக் காரணம் எனவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள விவரங்கள் தெரிவிக்கின்றன. 

நடைமுறையின்படி, பிரதமர் வெளிநாட்டில் இருக்கும்போது, ​​பிரதமரின் செயலாளர் பதவியில் இருக்க வேண்டும், இது வெளியுறவு அமைச்சருக்கும் வெளியுறவுத்துறை செயலருக்கும் பொருந்தும்.

எனினும் இத்தாலிய பயணத்தின் போது காமினி செனரத் பிரதமருடன் சென்றிருந்த அதேவேளை கொலம்பகேவும் வெளிவிவகார அமைச்சருடன் சென்றிருந்தார். 

இரு செயலாளர்களும் ஏன் இத்தாலியில் இருந்தனர் என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

நாடு கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட ஒரு முக்கியமான தருணத்தில், நாட்டின் தலைவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் வெளிநாட்டு பயணங்களுக்கு பொது நிதியைப் பயன்படுத்தியது மிகவும் கவலைக்குரியது. 

எவ்வாறாயினும், இவ்வாறான வெளிநாட்டு விஜயங்களுக்கான அதிகப்படியான செலவுகள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய சேதத்தை ஏற்படுத்தியமை தெளிவான அறிகுறியாகும் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *