பணத்திற்காக தந்தையை திட்டமிட்டு கொலை செய்த மகள்!

அளுத்வல பிரதேசத்தில் மாரடைப்பினால் உயிரிழந்ததாக கூறி புதைக்கப்பட்ட நபரின் மரணம் கொலை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக உயிரிழந்தவரின் ஒரே மகள் மற்றும் 23 வயதுடைய இளைஞன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக படபொல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இறந்து போன தனது தந்தையின் வங்கிப் புத்தகத்தில் உள்ள சுமார் ஒரு கோடி ரூபாயை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அவரது மகள் 23 வயது இளைஞனுடன் இணைந்து இக்கொலையை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மாரடைப்பால் அவதிப்பட்டு வந்த தந்தை திடீரென இறந்துவிட்டதாக கூறி, மாரடைப்புக்கு பயன்படுத்திய மருந்தையும், பற்றுசீட்டை கொண்டு வந்து கொடுத்த மகள், பொலிஸ் நிலையத்தில் கதறி அழுது முறைப்பாடு செய்துள்ளார். எனினும் பின்னரே அது இயற்கையான மரணம் அல்ல கொலை என தெரிவித்துள்ளது.

சந்தேகநபரின் மகளின் கைத்தொலைபேசிக்கு வந்த தொலைபேசி அழைப்புகளை ஆராய்ந்த போது இந்த கொலைக்கான மூல காரணம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அம்பலாங்கொடை பாடசாலையில் ஆய்வக உதவியாளராகப் பணிபுரியும் மூன்று பிள்ளைகளின் தாயான இந்த சந்தேகத்திற்கிடமான மகள், தனது தந்தையின் வங்கிப் புத்தகங்களின் பணம் மற்றும் சொத்துக்களை தான் பெற்றுக் கொள்ள ஆசைப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, பெந்தோட்டை மிரிஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞனுடன் இணைந்து அவர் தந்தையை கொலை செய்துள்ளார்.

ஹிக்கடுவையில் இரவு இடம்பெற்ற இசை நிகழ்ச்சியை பார்வையிடுவதற்காக சந்தேகநபரான பெண் தனது மூன்று பிள்ளைகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனால் அவரது தந்தை மாத்திரம் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

வீட்டின் சாவி மறைத்து வைத்துள்ள இடத்தை அவர் இளைஞனுக்கு குறுந்தகவல் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். யாருக்கும் தெரியாமல் தன் தந்தையை கொலை செய்துவிட்டு, இளைஞன் விரும்பிய அதி நவீன மோட்டார் சைக்கிளை எடுத்து செல்ல பெண் இளைஞனுக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

அதற்கமைய, குறித்த இளைஞன் இரவு நேரத்தில் இந்தவீட்டிற்கு வந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டின் சாவியை எடுத்து தலையணையில் தந்தையின் வாயையும் மூக்கையும் அழுத்தி கொலை செய்துள்ளதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இரவு இசை நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்த மகள், தந்தையின் சடலத்தை அறையில் வைத்துவிட்டு இரவு உணவு சாப்பிட்டுள்ளார். அதன் பின்னர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று அழுது நாடமாடியுள்ளார் என அதிகாரிகளின் தீவிர விசாரணைகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *