Twitter நிறுவனத்தில் இருந்து விலகும் ஊழியர்கள்!
Twitter ஊழியர்கள் பணி நீக்கம், தாமாகவே இராஜினாமா செய்யும் ஊழியர்கள் என்று எலான் மஸ்க் கைப்பற்றிய Twitter நிறுவனத்தின் புதிய நிர்வாகத்தில் பெரும் குழப்பமான சூழல் காணப்படுகிறது.
Twitter அலுவலகங்கள் அனைத்தும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை மூடப்படும் என்று அந்நிறுவன ஊழியர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுவரை ஊழியர்களால் அலுவலகத்திற்குள் நுழைய முடியாதென தெரிவிக்கப்படுகின்றது.
ஊழியர்கள் நீண்டநேரம் கடுமையாக வேலை செய்வதற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று Twitterஇன் உரிமையாளர் எலான் மஸ்க் அண்மையில் தெரிவித்திருந்தார்.
பல அலுவலகங்கள் ஊழியர்கள் இல்லாமல் மூடப்பட்டுள்ளன. கடுமையாக உழைக்கத் தயாராக இல்லை என்றால் மூன்று மாத ஊதியத்துடன் பணியை விட்டு விலகுமாறு ஊழியர்களுக்கு எலன்மஸ்க் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அதை அடுத்து நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேலையிலிருந்து விலகியதாகக் கூறப்படுகிறது.
உயர் பதவியில் இருக்கும் சில ஊழியர்களைச் சந்தித்து நிறுவனத்தில் தொடர்ந்து இருக்குமாறு மஸ்க் கேட்டுக்கொண்டதாக ஊழியர் ஒருவர் குறிப்பிட்டார்.
வேலையிலிருந்து விலகியவர்களில் கோளாறுகளைச் சரிசெய்யும், சேவைகளில் இடையூறு ஏற்படுவதைத் தடுக்கும் பொறியாளர்களும் அடங்குவர்.
அதனால் Twitter சேவையின் நிலைத்தன்மை குறித்த அக்கறைகள் எழுந்திருக்கின்றன.
Twitter செயலியில் பிரச்சினைகள் எழுந்தால், அதைச் சரி செய்யக்கூட ஊழியர்கள் கிடையாது என்று கூறப்படுகிறது.