தேசிய அடையாள அட்டை பெறாதவர்களுக்கு 2500 ரூபா அபராதம்!

ஆட்பதிவு சட்டத்தின் கீழ் சில விடயங்களுக்கான அபராதத் தொகை திருத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய,15 வயதை எட்டிய நாளிலிருந்து ஒரு வருடத்திற்குள் தேசிய அடையாள அட்டையை பெறாத விண்ணப்பதாரர்களுக்கு அறவிடப்படும் அபராதத் தொகை 2500 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

திணைக்கள ரீதியான தாமதம் காரணமாக, முதல் விண்ணப்பத்திற்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதில் ஏற்படும் தாமதத்தினால் இரண்டாவது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் 250 ரூபா கட்டணம் அறவிடப்படவுள்ளது.

திணைக்கள ரீதியான தாமதம் இல்லாத சந்தர்ப்பங்களில் முதற்தடவையாக தேசிய அடையாள அட்டை பெறாத விண்ணப்பதாரர்களிடம் 2500 ரூபா அறவிடப்படுமென ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.

இரட்டைக் குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்கள் நிறைவடைவதற்குள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத விண்ணப்பதாரர்களிடம் இருந்து 2500 ரூபா அபராதம் விதிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி ஆவணங்கள் மற்றும் பிழையான தகவல்களை சமர்ப்பித்தல் உள்ளிட்ட, சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய குற்றங்களுக்கும் 2500 ரூபா அபராதம் விதிக்கப்படுமென ஆட்பதிவு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *