இலங்கைப் பெண்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்!
ஒவ்வொரு ஐந்து இலங்கைப் பெண்களில் இருவர் தமது வாழ்நாளில் உடல், பாலியல் மற்றும் பொருளாதார வன்முறைகளை எதிர்கொள்வதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
பெண்கள் அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த தேசிய செயல் திட்டம் விரைவில் வெளியிடப்படும் என்றார்.
காலி முகத்திடல் ஹோட்டலில் இடம்பெற்ற பெண்களின் அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான தேசிய செயற்திட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் பேசிய இராஜாங்க அமைச்சர், இதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மகளிர் பிரிவு மற்றும் ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவி கிடைப்பது பெரும் உதவி எனவும், எதிர்காலத்தில் இலங்கையின் 9 மாகாணங்களுக்கான ஆலோசனைகளை நடாத்துவதற்கு முன்னுரிமை அளிப்பதாகவும் தெரிவித்தார்.
அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்கு பெண்களின் சம பங்கேற்பு முக்கியம் என்றும் அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி, கலாநிதி ராதிகா குமாரசுவாமி, திருமதி.ரம்யா சல்காடு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.