அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு பின்னடைவு!

அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் பிரநிதிநிதிகள் சபையில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் குடியரசு கட்சி பெரும்பான்மையை பெற்றுள்ளது. அதனால் ஜோ பைடனுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் நாடாளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகள் உள்ளன. மக்களவை (லோக்சபா) உறுப்பினர்களை தேர்தல் மூலம் மக்கள் தேர்வு செய்வார்கள். மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினர்களை கட்சியின் எம்எல்ஏக்கள் தேர்வு செய்கின்றனர். அதேபோல் அமெரிக்காவிலும் இரு சபைகள் உள்ளன. நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை (கீழ்சபை), செனட் சபை (மேல்சபை) உள்ளன.

இதில் கீழ்சபையான நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் மொத்தம் 435 இடங்களும், மேல் சபையான செனட் சபையில் 105 இடங்களும் உள்ளன. அமெரிக்காவை பொறுத்தவரையில் அதிபர் தேர்தலும், நாடாளுமன்ற சபைக்கான தேர்தலும் தனித்தனியாகவே நடத்தப்படும். அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் என்ற நிலையில் செனட் சபை உறுப்பினர்களின் பதவி காலம் 6 ஆண்டுகளாகவும், நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகளாகவும் உள்ளன. இந்நிலையில் தான் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைக்கான 435 இடங்களுக்கும், செனட் சபையின் 35 இடங்களுக்கும் தேர்தல் நடந்தது.

அமெரிக்காவில் நாடாளுமன்ற தேர்தல் 2024ல் நடைபெற உள்ளது. இதற்கு 2 ஆண்டுகள் உள்ள நிலையில் இது இடைத்தேர்தல் என அழைக்கப்பட்டது. இதில் தற்போதைய அதிபர் ஜோ பைடனின் ஜனநாயக கட்சி மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அங்கம் வகிக்கும் குடியரசு கட்சி இடையே கடும் போட்டி நிலவியது.இந்த தேர்தலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஜனநாயக கட்சி செனட் சபையை கைப்பற்றியது. 435 உறுப்பினர்கள் பிரதிநிதிகள் சபையை பொறுத்தவரையில் பெரும்பான்மை பெற 218 உறுப்பினர்கள் வேண்டும்.

இதில் ஜனநாயக கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்தால் அதிபர் ஜோ பைடனுக்கு சாதகமாக இருக்கும். மாறாக டொனால்ட் ட்ரம்பின் குடியரசு கட்சி பெரும்பான்மையானால் அதிபர் ஜோ பைடனுக்கு நடைமுறை சிக்கலை ஏற்படுத்தும். அதாவது அடுத்த 2 ஆண்டுகளாக ஜோ பைடன் அதிபராக தொடர்ந்தாலும் பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை இல்லாமல் இருந்தால் அது அவரது செயல்பாட்டை முடக்கும். இதனால் பிரநிதிநிதிகள் சபையின் தேர்தல் முடிவு மிகுந்த எதிர்பார்ப்பாக இருந்தது.

இந்நிலையில்தான் தற்போது தேர்தல் முடிவு முழுவதுமாக வெளியாகி உள்ளது. பிரதிநிதிகள் சபையில் டொனால்ட் ட்ரம்பின் குடியரசு கட்சி பெரும்பான்மையை பிடித்துள்ளதாக என்பிசி, சிஎன்என் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதாவது பிரதிநிதிகள் சபையில் டொனால்ட் ட்ரம்பின் குடியரசு கட்சி பெரும்பான்மைக்கு தேவையான 218 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக வெளியிட்டுள்ளன. 210 இடங்களுக்கும் அதிகமாக ஜோபைடன் ஜனநாயக கட்சி கைப்பற்றியதாக தெரிகிறது. இதன்மூலம் அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் அதிபர் ஜோ பைடனுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

2024 ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், பிரதிநிதிகள் சபையில் அக்கட்சி பெரும்பான்மையை பிடித்து இருப்பது டொனால்ட் ட்ரம்புக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. மேலும் அமெரிக்காவை பொறுத்தவரையில் இடைக்கால தேர்தல் என்பது பதவியில் இருக்கும் அதிபரின் செயல்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் நடத்தப்படும் தேர்தல் என்ற பொதுவான பேச்சு உண்டு. இந்நிலையில் தான் பிரதிநிதிகள் சபையில் ஜோ பைடன் பின்தங்கியது அவர் மீதான அதிருப்தி அதிகரித்துள்ளதை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *