தனுஷ்க குணதிலக யுவதியின் கழுத்தை நெரித்து மூச்சு திணறச் செய்தார்!

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, அவுஸ்திரேலிய யுவதியின் கழுத்தை நெரித்து மூச்சு திணறச் செய்ததால், அந்த யுவதியின் மூளை ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிட்னியைச் சேர்ந்த பெண்ணொருவர் தனுஷ்க குணதிலக்க மீது பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு சுமத்தியதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை அணியின் ஹோட்டலில் வைத்து தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பான பொலிஸாரின் அறிக்கையை நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

அப்பெண் மீது குணதிலக்க பல தடவைகள் தனது உடலை பலவந்தமாக திணித்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் அப்பெண் தனது உயிர் குறித்து அஞ்சும் அளவுக்கு அவர் மூச்சுத் திணறச் செய்யப்பட்டார். மறுநாள் அவர் உளவள ஆலோசனை சேவைத் துறையினரை தொடர்புகொண்டார். அப்பெண்ணால் அழுகையை நிறுத்த முடியாமல் இருந்தது என மேற்படி ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஒக்டோபர் 29 ஆம் திகதி டேட்டிங் அப் ஒன்றின் மூலமாக இப்பெண்ணை தனுஷ்க குணதிலக்க தொடர்புகொண்டார். அதையடுத்த நாட்களில் அவர்கள் எழுத்து மற்றும் வீடியோ மூலமாக உரையாடினர்.

தன்னை சந்திப்பதற்கு பிரிஸ்பேன் நகருக்கு வருமாறு அப்பெண்ணிடம் குணதிலக்க கோரினார். அதற்கு அப்பெண் மறுத்தார்.

எனினும், நவம்பர் 2 ஆம் திகதி சிட்னியில் ஒபாரா பாரில் நேரில் சந்திப்பதற்கு இருவரும் இணங்கினர்.

பின்னர் அவர்கள் ஹண்டர் வீதியிலுள்ள பீட்ஸா விடுதியொன்றுக்கு சென்றனர். அதன்பின் அப்பெண்ணின் வீட்டுக்குப் படகுமூலம் செல்வதற்கு சேர்கியூலர் கீ துறைமுகத்துக்கு சென்றனர்.

இந்த ஜோடியினர் பல தடவைகள் மதுபானம் அருந்தினர். எனினும் இவர்கள் அல்கஹோலினால் பாதிக்கப்படவில்லை என அப்பெண் நம்புகிறார்.

படகுச் சவாரியின்போது, அப்பெண்ணை குணதிலக்க தனது உடலை அழுத்தியதுடன் பலவந்தமாக முத்தமிட்டார்.

அப்பெண்ணின் வீட்டுக்கு இவர்கள் இருவரும் வந்த பின்னர், குணதிலக்க பலவந்தமாக உறவுகொண்டார். ஒரு தடவை அப்பெண்ணினால் சுவாசிக்க முடியாத அளவுக்கு பலமாக மூச்சுத் திணறச் செய்யப்பட்டது’ எனவும் மேற்படி ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பெண் அதிகாரிகளுக்கு நவம்பர் 5 ஆம் திகதி முறைப்பாடு செய்தார். அத்துடன் றோயல் பிரின்ஸ் அல்பிரெட் வைத்தியசாலைக்கு சென்றார். அங்கு அவர் பாலியல் தாக்குதல்கள் தொடர்பான சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், மூச்சுத் திணறச் செய்யப்பட்டதால் மூளையில் ஏதேனும் காயம் ஏற்பட்டுள்ளதா என்பதை அறிவதற்காக மூளையில் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது எனவும் மேற்படி ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆணுறை அணிந்துகொள்ளுமாறு குணதிலக்கவை தான் கோரியபோதிலும், மேற்படி பாலியல் தாக்குதல்களின்போது, தனது படுக்கைக்கு அருகில் தரையில் ஆணுறை கிடந்ததை தான் கண்டதாவும் அப்பெண் தெரிவித்தார் என மேற்படி ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்ததையடுத்து அவர் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார், இது தொடர்பான வழக்கு ஜனவரி 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *