பூமியில் விழவுள்ள 23 ஆயிரம் கிலோ எடையுள்ள ரொக்கட்!

சீனாவின் தெற்கே வென்சாங் பகுதியில் இருந்து, 23 ஆயிரம் கிலோ எடை கொண்ட ராக்கெட் ஒன்று கடந்த அக்டோபர் 31ம் திகதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதில், சீனாவின் கட்டுமான பணியில் உள்ள டியான்காங் விண்வெளி நிலையத்திற்கு தேவையான மெங்சியான் என்ற உபகரணங்களின் தொகுதி புவி வட்டபாதைக்கு அனுப்பப்பட்டது. 

இதன்பின்னர், அந்த ராக்கெட் மீண்டும் பூமியை நோக்கி விழுகிறது. இந்த லாங் மார்ச் 5பி என்ற ராக்கெட்டானது பூமியின் எந்த பகுதியில் சரியாக விழும் என்ற விவரங்களை சீனா உறுதி செய்யவில்லை. இந்த ராக்கெட் மீண்டும் பூமிக்கு திரும்பும்போது, வளிமண்டலத்தில் எரிந்து சாம்பலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், கடந்த காலத்தில் சீன ராக்கெட் குப்பைகளில் சில முழுவதும் எரியாமல், அதன் பாகங்கள் பூமியில் விழுந்த அதிர்ச்சிகர சம்பவங்கள் நடந்து உள்ளன. 

இந்த முறை மீண்டும் அதுபோன்ற சம்பவம் நடக்க கூடிய சாத்தியம் உள்ளது என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்து உள்ளனர். இதுபற்றி விண்வெளி கழகத்தின் தலைமை பொறியியலாளர் அலுவலகத்தின் ஆலோசகர் டெட் மியூல்ஹாப்ட் கூறும்போது, சீனா மீண்டும் இதுபோன்று செயல்படுகிறது. இதனால், 88 சதவீத உலக மக்களின் வாழ்க்கை பேராபத்தில் உள்ளது. சீனாவின் விண்வெளி குப்பைகள் பூமியில் மக்களின் விழும் சூழலில், 700 கோடி மக்கள் பேராபத்தில் உள்ளனர் என தெரிவித்து உள்ளார். 

எனினும், தனிநபர் என வரும்போது, இது மிக சிறிய அளவிலான ஆபத்தே என விண்வெளி கழகத்தின் நிபுணர்கள் குழு தெரிவித்து உள்ளது. இதற்கு முன்பு இதேபோன்று சீன ராக்கெட்டின் மீதமுள்ள பாகங்கள் மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டன. ராக்கெட் எந்த பகுதியில் பூமியில் விழும் என்பது பற்றிய சரியான தகவல்களை சீனா தெரிவிக்கவில்லை என அப்போது, மேற்கத்திய மற்றும் ஆசிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *