ஆண் நண்பருடன் செல்போனில் ரகசிய பேச்சு மனைவியை கொன்ற கணவன்!
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த அலங்காரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்(36), கார் டிரைவர். இவரது மனைவி பச்சையம்மாள்(30). இவர்களுக்கு திவ்யா(11). கதிர்வேல்(9) என 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் மனைவி பச்சையம்மாள் அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருப்பாராம். யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறாய்? என கணவர் கேட்டால் அதெல்லாம் சொல்ல முடியாது என்பாராம். இதனால் மனைவியின் நடத்தை மீது சுரேஷிற்கு சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது.
கடந்த 12ம்தேதி இதேபோல் மனைவி பச்சையம்மாள் ஆண் நண்பருடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தாராம். இதையறிந்து கணவர் கேட்டதற்கு, ‘நான் அப்படி தான் பேசுவேன், உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள்’ என்றாராம். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் மனைவியை அடித்து உதைத்துள்ளார். இதில் கோபித்துக்கொண்டு பச்சையம்மாள் அருகே உள்ள கொரால்பாக்கம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் சென்று தங்கி இருந்தார். இந்நிலையில் நேற்று மனைவிக்கு போன் செய்து வீட்டுக்கு வந்து பிள்ளைகளை கவனிக்காமல் இப்படி செய்வது நியாயமா? என கேட்டுள்ளார்.
அப்போது என்னை கேள்வி கேட்க நீ யார்? எனக்கேட்டு தகராறு செய்தாராம். இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த சுரேஷ் கொரால்பாக்கம் கிராமத்திற்கு பைக்கில் சென்று மனைவியின் கழுத்தை அரிவாளால் வெட்டினாராம். மேலும் அவரது கழுத்தை அறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் பச்சையம்மாள் பரிதாபமாக இறந்தார். பின்னர் அரிவாளுடன் போளூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி சுரேஷ் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார், நேற்றிரவு மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி போளூர் சிறையில் அடைத்தனர்.
…