மனிதர்கள் போலவே பூமியில் வாழ்ந்த நியாண்டர்தால்கள் என்ன ஆனார்கள்?

நம்மைப் போலவே இந்த பூமியில் வாழ்ந்த நியாண்டர்தால்கள் என்ன ஆனார்கள்?
நியாண்டர்தால் மனிதர்களின் முகத் தோற்றம்
1856-ஆம் ஆண்டு, நியாண்டர்தால் மனிதர்கள் இந்த பூமியில் வாழ்ந்ததற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டத்தில் இருந்தே நமது மனித குலத்தின் பிரதிபலிப்புகளாக அவர்கள் பார்க்கப்பட்டு வருகின்றனர்.

நியாண்டர்தால்களும், ஹோமோ சேப்பியன்ஸ் (நவீனகால மனிதர்கள்) என்று அழைக்கப்படும் நாமும் ஒரே மூதாதையர்களிடம் இருந்து வந்த இனங்கள் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். நமது இனம் அபாரமாக வளர்ந்து, உலகம் முழுவதும் விரிந்து, இந்த உலகத்தையே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளோம். ஆனால் நியாண்டர்தால் மனிதர்கள் எப்படி அழிந்தார்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள்?

சுமார் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நியாண்டர்தால் மனிதர்கள் அழிந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது குறித்து உறுதியான தகவல்கள் இதுவரை இல்லை.

விண்கல் மோதலினாலும், எரிமலை வெடிப்புனாலும் டைனசர்கள் அழிந்ததாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால் மனிதர்களின் மற்றொரு இனமாக கருதப்படும் நியாண்டர்தால்கள் இறந்ததற்கான காரணம் இதுவரை கண்டறியப்பட முடியாத சிக்கலான முடிச்சுகளாகவே இருக்கின்றது.

யார் இந்த நியாண்டர்தால் மனிதர்கள்?

நியாண்டர்தால் மனிதர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பரிணாம வளர்ச்சியடைந்த மனித இனமாக கருதப்படுகின்றனர். மனித இனம் தோன்ற காரணமான மூதாதைய இனமான ஹோமினிடேயிலிருந்துதான் நியாண்டர்தால்கள் வந்ததாக கூறப்படுகிறது. ஹோமோ சேப்பியன்ஸான மனித இனமும் இதே ஹோமினிடேவின் கிளை பிரிவுகளிலிருந்து வந்தவர்களால்தான்.

4 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் நியாண்டதால்கள், மத்திய தரைக் கடல் பகுதியிலிருந்து சைபீரியா வரை அகன்று பரந்திருந்தனர். இவர்கள் அமைதியானவர்கள். மிகவும் புத்தி கூர்மையுடையவராகவும், ஹோமோ சேப்பியன்ஸைவிட பெரிய மூளையைக் கொண்டவர்களாகவும் இருந்தனர். மேலும், வேட்டையாடுவதில் சிறந்தவர்களாகவும் இருந்தனர். நெருப்பை பயன்படுத்துவதில் கை தேர்ந்தவர்களாக இருந்தனர்.

நியாண்டர்தால்கள் இளம் வயதினர், முதியவர் மற்றும் பலவீனமானவர்களைக் கவனித்துக் கொண்டனர். பாதுகாப்பிற்காக தங்குமிடங்களையும் உருவாக்கினர். கடுமையான குளிர்காலம் மற்றும் சூடான கோடையில் வாழ்ந்தனர். குறிப்பாக இறந்தவர்களை அடக்கம் செய்யும் பழக்கம் அவர்களிடம் இருந்தது. நியாண்டர்தால்களும், ஹோமோ சேப்பியன்ஸ்ஸும் 14,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒன்றாக வாழ்ந்தனர் என்றும் இனக்கலப்பிலும் ஈடுபட்டனர் என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன.

வாழ்வியல், காலநிலை மாற்றத்தின் காரணமாக சிக்கலாக மாறியது. மிகுந்த குளிர் சூழலிருந்து வெப்ப நிலைக்கு மாறும்போது தாவரங்கள், விலங்குகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது இவை எல்லாம் நியாண்டர்தால்களையும் பாதித்தது.

தொடர் காலநிலை மாற்றம் காரணமாக, நியாண்டர்தால்கள் மக்கள் தொகை 10 ஆயிரத்துக்கும் அதிகமாக பெருகவில்லை.

ஹோமோ சேப்பியன்ஸில் ஒரு குழுவில் 150 பேர் வாழ்ந்து வந்தனர். ஆனால் நியாண்டர்தால்கள் குழுவில் 5 முதல் 15 பேர் வரைதான் இருந்தனர். இவ்வாறு சிறிய கூட்டமாக இவர்கள் வாழ்ந்து வந்ததால் மரபணு ரீதியாக அவர்களால் தொடர்ந்து பரிமாணம் அடைய முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

மூன்றாவதாக, மற்ற வேட்டையாடுபவர்களுடன் நியாண்டர்தால்களுக்கு போட்டி இருந்தது. குறிப்பாக 60,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் இருந்து தோன்றிய ஹோமோ சேப்பியன்ஸுக்கும், நியாண்டர்தால்களுக்கும் இடையே நடந்த சண்டையில் அந்த இனம் அழிந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

டிஎன்ஏ என்ன கூறுகிறது:

நியாண்டர்தால்களின் மரப்பணுக்களை பரிசோதித்ததில் அவர்கள் இரத்த உறைதல், மன அழுத்தம், உடல் பருமன் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும் நியாண்டர்தால்களின் மரப்பணுக்களை பார்க்கும்போது அவை கரோனாவின் தீவிரத் தன்மைக்கு ஆளாகக் கூடியவர்கள் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிகின்றனர்.

கடந்த 150 வருடங்களாக நியாண்டர்தால்களின் எலும்புகள், பற்கள் போன்றவற்றை ஐரோப்பாவின் குகைகளில் கிடைக்கப் பெற்றுள்ளன. நவீன மனிதர்களின் டிஎன்ஏக்களுடன், நியாண்டர்தால்களின் டிஎன்ஏ 99.7% ஒத்து போகிறது. இதில் ஆச்சரியப்பட கூடிய செய்தி என்னவென்றால், இன்றும் சில ஐரோப்பா, ஆசியாவை சேர்தத சிலரிடம் நியாண்டர்தால்களின் டிஎன்ஏ 1 – 4% இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

நமது பூமியில் நம்மோடு பயணித்த நியாண்டர்தால்கள் குறித்து தொடர் ஆய்வுகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். நியாண்டர்தால்களின் அழிவுக்கான உண்மை காரணத்தை கண்டறியும் தருணம் முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது. காரணம், அதிலிருந்து கால நிலை மாற்றத்தின் விளைவையும், அதனை எவ்வாறு நமது மனித இனமும் எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான படிப்பினையையும் நியாண்டர்தால் மனிதர்களின் முடிவுகளிலிருந்து நாம் கற்று கொள்ள முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *